வேந்தன் ஒருங்கு உறைகின்றநாள் - சுவலனசடி மன்னன் அம் மனைவியுடன் கூடிவாழ்கின்ற காலத்தில்; அலர்தாரினான் - மலர்ந்த மலரினால் தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்தவனாகிய; பெய்கழல் - மறக் கழலையணிந்த; அருக்க கீர்த்தி என்பான் - அருக்க கீர்த்தியென்னும் பெயரினையுடையவன், பெருக்கம் ஆகப் பிறந்தனன் - சிறப்புண்டாகுமாறு தோன்றினான், (எ - று.) வாயுவேகையோடு சுவலனசடி யரசன் இன்பந்துய்த்து வாழுங் காலத்தில் அருக்க கீர்த்தி என்னும் மகன் தோன்றினன் என்க. முருக்கு - பலாசமரம்; அதன் மலர்க்கு முதலாகுபெயர். “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு“ என்பது பற்றிப் பெருக்கமாகப் பிறந்தனன் என்றார். |
( 31 ) |
சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல் |
150. | நாம நல்லொளி வேனம்பி நங்கையா யேம நல்லுல கின்னிழிந் தந்நகைத் தாம மல்லிகை மாலைச் சயம்பவை 1காம வல்லியுங் காமுறத் தோன்றினாள். |
(இ - ள்.) அம்நகை - அழகிய பற்களையும்; தாம மல்லிகைமாலை - ஒளியுள்ள மல்லிகை மாலையையும் உடைய; சயம்பவை - சுயம்பிரபை என்பவள்; ஏமம் நம்உலகின் இழிந்து - இன்பமே நுகருமிடமான விண்ணுலகினின்றும் இறங்கி; நாமநல் ஒளி வேல்நம்பி நங்கையாய் - அச்சத்தை யுண்டாக்குவதும் நல்ல ஒளியுள்ளதுமான வேற்படையையுடைய சிறந்தோனாகிய அருக்ககீர்த்தியின் தங்கையாய்; காமவல்லியும் காமுறத் தோன்றினாள் - கற்பகத்திற் படரும் காம வல்லிக்கொடியும் தன் அழகைக் கண்டு விரும்புமாறு பிறந்தாள், (எ - று.) அருக்க கீர்த்திக்குத் தங்கையாகச் சுயம்பிரபை என்பவள் தோன்றினாள் என்க. நம்பி என்பது ஆண்பாற் சிறப்புப்பெயர்; நங்கை என்பது பெண்பாற் சிறப்புப்பெயர்; நம்பி நங்கையாய் - என்பதற்குச் சிறந்த ஆண்மகனான சுவலனசடியின் சிறந்த மகளாக என்று பொருள் |
|
|
(பாடம்) 1. காம நல்லொளி. |