பக்கம் : 1202
 

    

1941. 1சாவ நலிந்திருடந் தண்ணீர்ப் 2பிணிபெரி(து)
ஆவென் றலறு மவரையரு நஞ்சின்
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்துண்டு
நாவு மழுக நரல்வ ரொருசார்
 
     (இ - ள்.) தண்ணீர்ப்பிணி பெரிது - நீர் வேட்கையாலாய துன்பம் மிக்கது, ஆ -
ஐயகோ, சாவ நலிந்திடும் என்று - எம்மை உயிர்போம்படி துன்புறுத்துகின்றதே என்று,
அலறும் அவரை - அலறி அழுகின்ற அந்நரகரை, அருநஞ்சின் வாவிகள் காட்டலின் -
மாற்றுதற்கு அரிதாகிய கொடிய நச்சுத்தன்மையுடைய குளங்களைக் காட்டுதலாலே, மண்டி -
அந் நஞ்சுடைய குளங்களில் விரைந்து சென்று, மடுத்து உண்டு - ஆர்வத்தோடு அந்நீரை
வாய்மடுத்துப் பருகி, நாவும் அழுக - தம் நாவுகளும் அழுகிவிட, ஒருசார் நரல்வ - ஒரு
பக்கத்தே அழா நிற்பர், (எ - று.)

     சாமாறு வருத்தும் நீர் வேட்கையாலே அலறுவோரை நஞ்சின் வாவிகள் காட்டலின்
மண்டி உண்டு நாவுமழுகிவிட அழாநிற்பர் என்க.

(831)

 
1942. அழலிவை யாற்றோ மெனவழன் றோடி
நிழலிவை யாமென நீள்பொழிற் புக்கால்
3தழல்வளி தாமே தலைவழி சிந்தக்
கழல்வனர் வீழ்ந்து கரிவ ரொருசார்.
 
     (இ - ள்.) அழலிவை ஆற்றோம் - இந்நெருப்பிடை நிற்றலை இனிப் பொறோம், என
- என்று கூறி, அழன்று - மனம் புழுங்கி, நிழல் இவையாம் என நீள்பொழில் ஒடிப்புக்கால்
- இவை நமக்கு நிழலாகும் என்று கருதி ஆங்குள்ள நீண்ட சோலைகளினூடே ஓடிப்
புகுந்தவிடத்தே, தழல்வளி தாமே - அச்சோலையில் நெருப்புக்காற்று, தலைவழி சிந்த -
மேலிருந்து தம் தலையின் வழிச்சொரிய, கழல்வனர் - உய்வோம் என்னும் நம்பிக்கை
கழன்றவராய், வீழ்ந்து கரிவர் ஒருசார் - தரையிடை விழுந்து உடல் கருகுவர் ஒரு
பக்கத்தே, (எ - று.)

     அவ்விடத்தேயுள்ள தீக்குப் பயந்து ஓடி நிழலிலே புக்கால் தீக்காற்றுத் தம்
தலையிலே சொரிய வீழ்ந்து கரிவர் என்க.

(832)

 
1943. முல்லை முகைமலர்த் தாரோய் முதற்புரை
அல்ல லெனைப்பல வாயிர கோடிகள்
எல்லையி றுன்ப மிவற்றி னிருமடி
புல்லினர் கீழ்க்கீழ்ப் புரைபுரை தோறும்.
 

     (பாடம்) 1 சாவாய், சாவா. 2 பிணியெரி. 3 தழல் வழி.