பக்கம் : 1203
 

       (இ - ள்.) முல்லை முகை மலர்த்தாரோய் - முல்லை மலர் மாலையை அணிந்த
வேந்தனே, முதற்புரை அல்லல் - நரகத்தின் முதலாவதாகிய இப்பேரிருளில்
உழப்பனவாகிய இன்னோரன்ன இன்னல்கள், எனைப்பல ஆயிரகோடிகள் -
எத்துணைவகையாகவும் பல்லாயிரக்கோடிகளாகவும், எல்லையில் துன்பம் - முடிவற்ற
துயரந்தருவனவாம், கீழ்க்கீழ் புரைபுரை தோறும் - நிரலே இரண்டாம் புரைமுதலாக
அடுத்தடுத்துக் கீழே உள்ளனவாகிய புரைகள் தோறும், இவற்றின் இருமடி புல்லினர் -
இவையிற்றைப் போன்று ஒவ்வொன்றினும் இவ்விரண்டு மடங்கு பெருக நுகர்வர், (எ - று.)

     தாரோய்! நரகத்தின் முதற்புரையின்கண் உள்ளோர் அல்லல்கள் இவை போல்வன
எண்ணிறந்தனவாம், கீழ்க்கீழ் நரகங்களின் அவ்வின்னல் மிகும் என்றார் என்க.

(833)

 
1944. விளிவி றுயரொடு மேற்பொங்கி வீழும்
அளவு மவர்கண் முறையும் பிறவும்
அளவில கீழ்க்கீ ழிரட்டி 1யறைந்தேன்
உளரொளி ஞானமஃ தொன்று மொழித்தே.
 
     (இ - ள்.) விளிவு இல் துயரொடு - முடிவில்லாத துயரத்தோடே, மேல் பொங்கி
வீழும் அளவும் - மேலே எழுந்து மீண்டும் விழுந்துழலும் நரகங்களின் அளவைகளும்,
அவர்கள் முறையும் - அந்நரகத்தார் நுகரும் வகையும், பிறவும் - இன்னோரன்ன
பிறசெய்திகளும், கீழ்க் கீழ் இரட்டி அளவில - கீழ்ப்போகப் போக ஒன்றனுக்கு ஒன்று
இருமடியாய் மிகும் இன்னல் அளவிறந்தனவாம், உளர் ஒளிஞானம் அஃது ஒன்றும்
ஒழித்தே - கிளர்தலையுடைய நன்ஞானம் ஒன்றும் நிற்க, பிறவற்றை ஒருவாறு,
அறைந்தேன் - கூறினேன், (எ - று.)

     கதியும் கதியினுள் துப்பும், துப்பின் விதிசெய்வினையும் என முன்னர்த் தொகுத்துக்
கூறியவற்றை இதுகாறும் வகுத்துரைத்தேன், என்றார், வினைவெல்வகையும் வீட்டது
மாண்பும் என்னும் இரண்டனையும் ஈண்டு ஞானம் என்னும் ஒன்றினடக்கி, ஞானம் ஒன்றும்
நிற்க ஏனைய கூறினேன் என்றார்.

(834)

 
1945. பெய்யா வருநஞ்சும் பேரழற் குட்டமும்
செய்யாக் குழிகளுஞ் சீநீர்த் தடங்களும்
நையா நரக ரிடமிவை நாறினும்
உய்யா பிறவுயி ரோசனைக் கண்ணே.
 

     (பாடம்) 1 பிறந்தே, மறந்தே.