பக்கம் : 1207
 

நரகில் வீழ்தற்குரியார் இவர் எனல்

1951. ஆங்குண் டெனப்படு மாழ்துயர் வீழ்பவர்
தேங்கொண்ட பைந்தார்த் திறன்மன்ன யாரெனில்
தாங்கொண்1ட தார மறுத்துப் பிறன்வரைப்
பூங்கொண்டை மாரைப் புணரு மவரும்
 
     (இ - ள்.) தேம்கொண்ட பைந்தார் திறல்மன்ன! - தேனைத் தன்னகத்தே
கொண்டுள்ள பசிய மலர்மாலையை உடைய ஆற்றல் சான்ற அரசனே!, ஆங்கு
உண்டெனப்படும் - அந்நரகங்களிலே உளவாம் என்று கூறப்படுகின்ற, ஆழ்துயர் வீழ்பவர் - மீளாதவாறு அழுந்துதற்குரிய பெருந்துயரங்களிலே விழுந்துழல்வார், யார்எனில் -
எத்தகையோர் என்றுவினவில், தாம் கொண்ட தாரம் மறுத்து- தாம் நூன் முறையாலே
மணந்துகொண்ட மனைவியொடு வாழ்தலைவிட்டு, பிறன்வரைப் பூங்கொண்டைமாரை -
பிறனுக்குரியளாய் அவனது வரைப்பிலே நிற்றற்குரிய, பூவால் அழகுறுத்தப்பட்ட
கொண்டையையுடைய பிறமகளிரை, புணரும் அவரும் - புணர்கின்ற அறன்கடை
நின்றோரும், (எ - று.)

     பூங்கொண்டைமார் என்றது இகழ்ச்சிக் குறிப்பு; அகத்தழகற்ற வேசியர் என்றபடி.
அந்நகரத்தே வீழ்வார் யாரெனில் தந்தாரம் மறுத்துப் பிறன் மனையவரைப் பேணுமவர்
என்க.

(841)

 
1952. உள்ளங் கொடியா ருயிர்க்கொலை 2காதலர்
வெள்ளங் கொடியன மேவிப் பிறன்பொருள்
கொள்ளுங் கொடுமைக் 3குணத்தின் மனித்தரும்
நள்ளலர்ச் சாய்த்தோய் நரக மடைவார்.
 
     (இ - ள்.) நள்ளலர்ச் சாய்த்தோய் - பகைவர்களை வென்ற வேந்தனே, உள்ளம்
கொடியார் - தீய நெஞ்சமுடையராய், உயிர்க் கொலை காதலர் - பிறவுயிர்களைக் கொல்லுந்
தொழிலை விரும்புவோரும், கொடியன மேவி - களவு வஞ்சம் கொலை முதலிய தீத்
தொழிலைப் பொருந்தி, பிறன் பொருள் வெள்ளம் கொள்ளும் - பிறனுடைய பொருட்
பெருக்கத்தைக் கவர்ந்து கொள்ளும், கொடுமைக் குணத்தின் மனித்தரும் - கொடிய
குணத்தையுடைய மனிதர்களும், நரகம் அடைவார் - அந்த நரகங்களிலே வீழ்பவராவர்,
(எ - று.)

     மேலும், உயிர்க் கொலை செய்வோரும் பிறன்பொருள் வெஃகுவோரும் கொடுமைக்
குணமுடையோரும் அந்நரகப் பிறப் பெய்துவர் என்றார் என்க.

(842)

 

     (பாடம்) 1 டவரை. 2காதல. 3 குணமில் மனித்தரும்.