பக்கம் : 1209
 
 
1955. ஆறா நரக வழலினு ளாழ்பவர்
தேறார் திருவறந் தேறினு நல்வத
மேறார் சிலர்நனி யேறினு நில்லலர்
வேறா 1யினிச்சொல்ல வேண்டுவ துண்டோ.
 
     (இ - ள்.) ஆறா நரக அழலினுள் ஆழ்பவர் - அவிந்தொழியாத நரகமென்னும்
தீயினுள்ளே அழுந்தும் இந்நரகர்கள், திருஅறம் தேறார் - அருகனுடைய மேலான
அறவுரைகளை அறிந்துணரமாட்டார், தேறினும் - ஓரோவழி உணர்வார் உளராயினும்,
நலவதம் ஏறார் - உயரிய விரதங்களில் நின்று ஒழுகுவாரல்லர், சிலல் நனி ஏறினும் - சிலர்
அவ்விரதநெறிகளிலே ஒழுகினும், நில்லலர் - அந்நெறிக்கண் நிலைத்து நிற்பாரலர், வேறாய்
இனிசொல்ல வேண்டுவதுண்டோ - இதுகாறும் கூறியவற்றின் வேறாக இன்னும்
சொல்லவேண்டுமோ (வேண்டாவன்றே), (எ - று.)

     நரகர் ஒரோவழி அறந்தேறினும் அவ்வழி நிற்பாரல்லர் என்றபடி.

(845)

 

விலங்குகதித் துன்பம்
விலங்குகளின் வகை

1956. விலங்குடன் சாதி விரிப்பிற் பெருகும்
உலங்கொண்ட தோண்மன்ன வோரறி வாதி
புலங்கொண்ட வைம்பொறி 2யீறாப் புணர்ந்த
நலங்கொண்ட ஞாலத்தி னாடி யுணர்நீ.
 
     இது முதல 15 செய்யுள் ஒரு தொடர்

     (இ - ள்.) விலங்குடன் சாதி - விலங்குகளினுடைய வகைகளை, விரிப்பிற் பெருகும் -
விரித்துரைக்கப் புகுவேமாயின், அதுமிகப் பெருகா நிற்கும் (ஆதலிற் சுருக்கமாகக்
கூறுவோம்), உலங்கொண்டதோள் மன்ன - உலக்கல்லை யொத்த தோளையுடைய
அரசனே, ஓர் அறிவு ஆதி ஐம்பொறி யீறாப்புணர்ந்த - அவை ஒன்றறிவுயிர் முதல் ஐந்து
பொறியான் அறியும் ஐந்தறிவுயிர் இறுதியாகத் தொகைப்படுவனவாம், நலங்கொண்ட
ஞாலத்தின் - அழகிய உலகினிடத்தே, நீ நாடி உணர் - நீயே ஆராய்ந்து அறிந்துகொள்க,
(எ - று,)
 

     (பாடம்) 1 வினிச்சொல், வினிச்சொல. 2 யீறாய்ப் புணர்த்த.