பக்கம் : 1215
 

     அவற்றைத் தாயர் வளர்ப்புழியும் பகை விலங்கு முதலியவற்றாற் றுன்புறும் என்க.

 (856)
 
1967. இன்னன துன்பமொ டிவ்விலங் காகுநர்
என்னவ ரென்னி னிவைநனி கேளினி
மன்னிய 1மாதவ 2மேற்கொண்டு மாயங்கள்
பின்னை முயல்வார் பிறப்பு மதுவே.
 
     (இ - ள்.) இன்னன துன்பமொடு - இத்தகைய துயரங்களுடனே, இவ்விலங்கு ஆகுநர்
- இவ்விலங்குகளாய்ப் பிறப்போர், என்னவர் என்னின் - எத்தகையோர் என்று
வினவுவாயாயின், இவை நனி கேள்இனி - இனி யாம் கூறுமிவையிற்றைக் கூர்ந்து
கேட்பாயாக, மன்னிய மாதவம் மேற்கொண்டும் - நிலைபெற்ற பெரிய தவவொழுக்கத்தே
நின்றும், பின்னை - மீண்டும், மாயங்கள் முயல்வார் - வஞ்சகம் களவு முதலிய
கூடாவொழுக்கங்களில் முயல்கின்றவர்களின், பிறப்பும் அதுவே - மறுபிறப்பும்
அவ்விலங்கின் பிறப்பேயாம், (எ - று.)|

     இத்தகைய விலங்குப் பிறப்பில் தவவுருவங்கொண்டு படிற்றொழுக்கம் முயல்வோர்
புகுவர் என்க.

(857)

 
1968. பொருளிடை மாயம் 3புணர்த்தும் பிறரை
மருளிக ளாக மயக்கு மவரும்
இருளுடை யுள்ளமொ டேதங்க ளெண்ணா
அருளி லவரு மவைநனி யாவார்.
 
     (இ - ள்.) பொருளிடை மாயம் புணர்த்தும் - நென்முதலிய பொருள்களை
அளவைகள் முதலியவற்றால் வஞ்சித்தும், பிறரை - அயலாரை, மருளிகள் ஆக - தம்
வஞ்சம் அறியாது மயங்கும்படி, மயக்கும் அவரும் - மயக்கி ஏமாற்றுபவரும், இருளுடைய
உள்ளமொடு - தீமை நிறைந்த நெஞ்சத்தோடே, ஏதங்கள் எண்ணா - பிறர் கேடுசூழும்,
அருள் இலவரும் - அருள் இல்லாத கயவரும், அவை நனி ஆவார் - அவ்விலங்குகளாய்
மிகவும் பிறப்பார், (எ - று.)

      பொருளிடை மாயம் புணர்த்தலாவது “கொள்வது மிகைகொண்டு கொடுப்பது
குறைகொடுத்தன்“ முதலியனவாம்.

(858)

 
1969. பற்றொடு பற்றி முனிந்தார் பலபல
செற்ற நவின்றார் செறுப்பொடு சென்றவர்
சுற்ற மழிக்குந் 4துவர்ப்பகை துன்னினர்
மற்றிவ் விலங்கெய்து மன்னுயிர் மன்னா.
 

     (பாடம்) 1 மாதவர். 2 மேற்கொள. 3 புணர்ந்து. 4துவர்ப்பசை.