பக்கம் : 1223
 

     இல்லை அமர்ந்துழி - இல்லிலிருந்து செய்யும் அறத்தை விரும்பும் இயல்புடைய தாய்
தந்தையரிடத்தே என்றபடி.

    உலகில் ஒழுக்கமின்றி விலங்குபோல மனித வகுப்பினர் இருத்தலால் அவ்வகுப்பிற்
பிறவாமல் இல்லற முதலியவற்றை வரைந்து வாழும் வகுப்பிடைப் பிறத்தலும் அரிதென்க.

(873)

 
1984. அண்ணை யலிகுரு டாதி யவர்களை
மண்ணுயர் ஞாலத்து 1மானுட ராகவைத்
தெண்ணுநர் யாருள ரெல்லா மமையினும்
பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே.
 
     (இ - ள்.) அண்ணை அலி குருடு ஆதியவர்களை - மருள்பேடு குருடு முதலிய
பிறப்பினர் ஆகியவர்களை, மண் உயர் ஞாலத்து - மண் திணிந்துயர்ந்த உலகத்தே,
மானுடராக வைத்து - மனிதர் என்று, எண்ணுநர் - கருதுவார், யார் உளர் - யாரே
இருக்கின்றனர், எல்லாம் அமையினும் - நல்ல நில முதலிய எல்லா நன்மைகளும் அமையப்
பெற்றுத் தோன்றிய விடத்தும், பெண்ணின் பிறவியும் பீடு உடைத்தன்று - பெண்ணாய்ப்
பிறக்கும் பிறப்பும் பெருமை உடையதாகாது, (எ - று.)

     பெண்ணின் பிறப்புப் பீடுடைத்தன்று, என்று கோடல் சைனர்கள் கொள்கை என்க.

(874)

 
1985. எண்பத்து நான்கெனு நூறா யிரமுள
பண்பொத்த சாதிப் 2பவமென்ப மற்றவை
3கண்பற்றுந் தாரோய் களிப்பதொர் நல்வினைத்
திண்பற் றுடையவ ரிவ்வுடல் சேர்வார்.
 
     (இ - ள்.) பண்பு ஒத்த சாதிப் பவம் - பிறப்பிறப்பு முதலியவற்றில் ஒரு
தன்மையவாய்ப் பலவகைப்பட்ட பிறப்புக்கள், எண்பத்து நான்கு எனும் நூறாயிரம் உள
என்ப - எண்பத்து நான்கு நூறாயிரம் வகையின என்று அறிஞர் கூறுவர், மற்றவை -
அவையிற்றுள், கண்பற்றும் தாரோய் - கண்ணைக் கவரும் அழகுடைய மாலையணிந்த
மன்னனே, களிப்பதோர் நல்வினை - தாமும் பிறரும் மகிழ்தற்குக் காரணமான
நல்லறங்களிலே, திண் பற்று உடையவர் - திண்ணிய விருப்பம் உடைய நல்லோரே,
இவ்வுடல் சேர்வர் - இம்மானிட நல்லுடல் எய்தற் பாலார், (எ - று.)

     எண்பத்து நான்கு நூறாயிரம் வேற்றுமையுடைய பிறப்புக்களிலே வைத்து மானிடராதல்
அரிது, அப்பிறப்பு நல்வினையாலேயே எய்தப்படும் என்க.

(875)

 

     (பாடம்) 1 மானுய. 2 பிறவியள். 3 கண்பற்று.