பக்கம் : 1236
 
எழுவகை அறவாயில்கள்
2008. அருளுந் தெருளுங் குணத்தின்க ணார்வமும்
பொருளொன்று 1சேரும் புகழ்ச்சி 2நிகழ்வும்
3மருளி றவமும் வாலிய ஞானமும்
4இருளறு தியான நிகழ்வுமென் றேழே.
 
     (இ - ள்.) அருளும் - அருளுடைமையும், தெருளும் - அறிவுடைமையும்,
குணத்தின்கண் ஆர்வமும் -உயரிய குணங்களை விழைதலும், பொருள் ஒன்று சேரும்
புகழ்ச்சி நிகழ்வும் - மெய்யுணர்ச்சி உண்டாதற்குரிய புகழ்ச்சி நிகழ்வும், மருள் இல் தவமும்
- அறியாமையில்லாத தவமும், வாலிய ஞானமும் - தூய்தாகிய அறிவும், இருள் அறு
தியான நிகழ்வும் - மயக்கம் அறுதற்குரிய தியான நிகழ்வும், என்று ஏழே - என்று ஏழு
வாயில்களும் வேறுள்ளன, (எ - று.)

     முன்னர்க் கூறிய நான்கேயன்றி அருள் முதலிய இவ்வேழும் அற வாயில்களாம்
என்க.

(898)

 

அருளுடைமை

2009. ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற்
கோருயிர் போல வுருகி யுயக்கொள்ள
நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத்
தீர முடைமை யருளி னியல்பே.
 
     (இ - ள்.) யாதொன்று ஆர்உயிர் இடருறும் - யாதானும் ஓர் உயிர் இடுக்கண்
உறக்கண்டால், ஆங்கு அதற்கு - அப்பொழுது அவ்வுயிர்க்கு, ஓர் உயிர்போல உருகி -
தன்னுயிர்க்கு இடுக்கண் வரும்போது உருகுமாப்போல இரக்கத்தான் உருகா நின்று, நேரின்
உயக்கொள்ள- இயலுமாயின் அவ்விடுக்கண் தீர்த்து அதனைக் காப்பாற்றுக, அது முடியாது
எனில் - அவ்வாறு காப்பாற்ற வியலாத விடத்தும், நெஞ்சகத்து ஈரம் உடைமை - தன்
நெஞ்சத்தே இரக்கம் உடையனாதல், அருளின் இயல்பே - இத்தன்மை யுடைமையே அருள்
உடைமையாம்,
 

     (பாடம்) 1 சேர்வும். 2 நிகழ்ச்சி. 3 மருளும் தவத்தொடு ஞான நிகழ்ச்சி.

     4 இருளின றியான் நிகழ்ச்சியென் றேழே.