பக்கம் : 1245
 

     யடைந்து, மிக்க ஒளி சூழ்ந்து - மிக்க ஒளிபடைத்த மேனியுடையராய், மிளிர்
மேனியவராகி - ஒளிருகின்ற உடலுடையராய், தக்க இளமைப் பருவம் எய்தினர்கள் -
நுகர்ச்சிக்குத் தகுதியான இளமைப் பருவத்தை அடைந்தனர், ஆல், தாம், ஏ : அசைகள்,
(எ - று.)

     இப்போக பூமியில் பிறப்போர் பிறந்தது முதல் ஏழுநாட்கள் விரல் சுவைத்துக் கிடந்து,
பின் ஏழுநாள் தவழ்ந்து, பின் ஏழுநாள் தளர் நடை பயின்று பின், ஏழுநாள் மழலை
பயின்று, பின் ஏழுநாள் நன்கு நடந்து, பின் ஏழுநாள் கலை முழுதும் பயின்று, பின் ஏழு
நாளில் இளமை நன்கு நிரம்பப் பெறுவர், என்பவாகலின் இவ்வெழுகூற்று நாற்பான் ஒன்பது
நாட்களில், இளமை நிரம்ப எய்தினர் என்றார்.

(916)

 
2027. கொம்பழகு கொண்டகுழை நுண்ணிடை நுடங்க
வம்பழகு கொண்டமணி மென்முலை வளர்ந்தாங்
கம்பவழ வாயுளணி முள்ளெயி றிலங்கச்
செம்பவள மேனியவள் கன்னிமை 1சிறந்தாள்.
 
     (இ - ள்.) கொம்பு அழகு கொண்ட குழை நுண்ணிடை நுடங்க - பூங்கொம்புபோன்ற
அழகையுடைத்தாய் நுடங்கும் நுண்ணிடை துவளவும், வம்பு அழகுகொண்ட மணி
மென்முலை வளர்ந்து - கச்சணிந்து அழகுமிக்க மணியணிகலன் பொருந்திய மெல்லிய
முலை பருத்து, அம்பவழ வாயுள் - அழகிய பவளம் போன்ற செவ்வாயின்கண், அணிமுள்
எயிறு இலங்க - நிரலாய் அமைந்த முட்போலும் கூரிய பல்வரிசை திகழ, செம் பவள
மேனியவள் - செவ்விய பவழம் போன்ற நிறமுடைய அம்மகள், ஆங்கு - அப்பொழுது,
கன்னிமை சிறந்தாள் - கன்னிப்பருவம் எய்திச் சிறந்து விளங்கினாள், (எ - று.)

     வம்பு - முலைக்கச்சு ; வம்பழகு - புதிய அழகு எனினுமாம்.

     இடைநுடங்க முலை வளர்ந்தாங்கு எயிறிலங்க அவள் கன்னிமை சிறந்தாள் என்க.

(917)

 
2028. நீலமணி கண்டனைய குஞ்சிக ணிறைந்தான்
ஞாலமளி கொண்டநளிர் தாமரை முகத்தான்
கோலமணி மால்குவடு குங்குமம டுத்தால்
போலுமணி மேனியொடு காளைபொலி வுற்றான்.
 
     (இ - ள்.) நீல மணி கண்டனைய குஞ்சிகள் - நீலநிறமுடைய மரகத மணியைக்
கண்டாற்போன்ற தலைமயிர்க்கற்றை, நிறைந்தான் - நிறையப் பட்டான், கோலமணி மால்
குவடு குங்குமம் அடுத்தாற்போலும் - அழகிய
 

     (பாடம்) 1 நிறைந்தாள்.