பக்கம் : 1249
 

     (இ - ள்.) அவண் - அப்போக பூமியிலே, கங்குல் இல்லை - இராப்பொழுது இல்லை,
கலி இல்லை - நல்குரவு இல்லை, நலிவு இல்லை - இன்னலில்லை, அங்கு -
அப்போகபூமியில், அவர்கள் - வாழ்பவர்கள், நாள் இடைகழித்து அமிர்து அயின்றல் -
நாள்கள் சில இடையிட்டு உணவு உண்பாராயினும், எங்கும் இல இன்ப எழில் எய்தல்
தரும் - அவ்வுணவே வேறியாண்டும் இல்லையான பேரின்பத்திற்குக் காரணமான அழகை
அளிக்கும், தங்கிய தவத்தரசர்க்கு ஈந்தபயன் ஈது - தம்பால் தங்கி ஒழுகிய சிறந்த
துறவிக்கு அத்தவம் அளித்த பயன் இத்தன்மைத்து, தான், ஏ, ஆல் : அசைகள், (எ - று.)

     “அயின்றாலும்“ என்பதில் உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. போக
பூமியிலுள்ளார், மூன்றுநாள் இடையிட்டு ஒரு கடலையளவு உணவே உண்பர் என்க.
அங்ஙனம் நாளிடையிட்டுண்ணும் சிறிய உண்டியே அவர்கள் உடல் வளம்படுதற்குப்
போதியதாம் சத்துடைத்து என்றபடி.

(924)

 
2035 அன்னமிகு போகமவ ரெய்திவிளை யாடி
முன்னமுடி பல்லமவை மூன்றுடன் முடித்தால்
பின்னுமவர் தம்வழி பிறந்தவரை நோக்கி.
மன்னுமினி தேறுவது வானுலக மன்னோ.
 
     (இ - ள்.) அன்னமிகு போகம் - அத்தகைய பெரிய -நுகர்ச்சி யின்பத்தை, அவர்
எய்தி - அப்போக பூமியோர் நுகர்ந்தவாறே, முன்னம் முடி பல்லம் அவை மூன்று உடன்
முடித்தால் - முன் கூறி முடித்த மூன்று பல்ல காலங்களையும் ஒருங்கே கழிப்பாரெனில்,
பின்னும் அவர் தம் வழி பிறந்தவரை நோக்கி - மேலும் அவர்கள் தம்பாற் பிறந்த
மகாரையும் கண்டு களித்து, இனிது ஏறுவது மன்னும் வான் உலகம் - அப்போக பூமியை
நீத்து அவர்கள் ஏறிச்சென்று பிறப்பது நிலை பேறுடைய வானுலகம் ஆகும், மன்னோ :
அசை, (எ - று.)

     போக பூமியினர் தம் நெடிய வாழ்நாள் முடிவில் ஒரே முறை ஆணும்
பெண்ணுமாகிய இரட்டை மகவுகளை ஈனுவர் என்றும், இறக்கும்போது இவர் உடல்கள்
முகில்போலக் கரைந்து மறையும் என்றும் கூறுப.

(925)

 
2036. 1பல்லமுத லோர்பகுதி மூன்றிரண்டு மொன்றும்
அல்லவிரு வர்க்கமிர்து 2மம்முறையி னேறும்
நல்லநிலங் காலமுயர் 3வென்றிவைக 4ணாடிச்
சொல்லவுல வாவிவர்கள் செய்கைசுடர் வேலோய்.
 

     (பாடம்) 1 பல்லமொரு மூன்று தலையோர்க் கிரண்டு. 2 மும்முறையி.

     3 வென்றிவற்றி. 4 னாளால்.