பக்கம் : 125
 

சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்

159. நங்கை தோன்றிய பின்னகை வேலினாற்
கங்கண் ஞாலம மர்ந்தடி மைத்தொழில்
தங்க நீண்முடி யாற்றலை நின்றனர்
வெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே.
 

     (இ - ள்.) நங்கை தோன்றியபின் - சுயம்பிரபை பிறந்த பிறகு; அம்கண் ஞாலம் -
அழகிய இடத்தையுடைய உலக முழுவதும்; நகை வேலினாற்கு - ஒளியுள்ள
வேற்படையையுடைய சுவலனசடி யரசனுக்கு; அடிமைத்தொழில் அமர்ந்து தங்க - அடிமை
செய்தலில் விரும்பிப்பொருந்த; வெங்கண்யானை விளங்கொளி வேந்தர் - அஞ்சத்தக்க
கண்களையுடைய யானைகளையும் விளங்குகின்ற ஒளியையுமுடைய அரசர்கள்; நீள்முடியால்
தலைநின்றனர் - நீண்ட முடியினால் நிலத்திற் பணிந்து நின்றார்கள், (எ - று.)

     சிறந்த பெண்பிறந்த நல்வினைச் சிறப்பால் சுவலனசடி யரசனுக்கு மேன்மேலும்
நன்மைகள் பெருகின என்க. ஞாலம் - இடவாகு பெயராய் உலகத்து மக்களை உணர்த்தி
நின்றது, சைனநூற் கொள்கையின்படி வித்தியாதர உலகம் நிலவுலகத்தின்பாற்பட்டதே
என்பர்.
 

( 41 )

(வேறு)
வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்

160. நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து
மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளுள்
பைங்கண்மால் யானையாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள்
வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள்.
 

     (இ - ள்.) வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்த மாதிலகை என்பாள் - கடலிடத்துத்
தோன்றிய பவழம்போன்ற சிவந்த வாயையுடைய வயந்த திலகை என்பவள்; நங்கையாள்
வளர்ந்து - சுயம்பிரபையானவள் வளர்ந்து; காமநறுமுகை துணரவைத்து - காமமாகிய நல்ல
அரும்பானது தோன்றுமாறு