பக்கம் : 126
 
பொருந்தி; மங்கையாம் பிராயம் எய்தி - மங்கைப்பருவத்தை யடைந்து; வளரிய நின்ற
நாளுள் - வளர்ந்துகொண்டிருக்கின்ற காலத்திலே; பைங் கண்மால் யானையாற்கு - பசிய
கண்களையும் பெரிய உருவத்தையுமுடைய யானைப் படையையுடைய அரசனுக்கு; பருவம்
வந்து இறுத்தது என்றாள் - இளவேனிற் காலம் வந்துவிட்டது என்று கூறினாள், (எ - று.)

     சுயம்பிரபை மங்கைப் பருவத்தையடைந்து வளர்ந்துகொண்டிருக்கிற காலத்தில்
இளவேனிற்பருவம் வந்தது. வயந்ததிலகை என்னும் தோழி அரசனிடம் சென்று இளவேனிற்
பருவம் வந்து சேர்ந்த செய்தியைத் தெரியப் படுத்தினாள். இளவேனிற் காலத்தில் அரசனும்
அவனைச் சேர்ந்தோரும் பொழில் விளையாட்டயர்தல் வழக்கம், அதனை அரசனுக்கு
நினைவூட்டுதற் பொருட்டு வயந்ததிலகை அச்செய்தியை அரசனுக்குத் தெரிவிக்கின்றாள்
வங்கம்: ஆகுபெயர்; கடல். யானை யான் - சடிமன்னன்.
 

( 42 )

வேனில் வரவைக் கூறுதல்

161. தேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்னர் மன்ன!
பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக்
கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல்
பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள்.
 

     (இ - ள்.) தேங்குலாம் அலங்கல்மாலை - தேன் பெருகுகின்ற தொங்கி யசைவதான
பூமாலையையும்; செறிகழல் - கட்டிய வீரக்கழலையுமுடைய; மன்னர்மன்ன! -
அரசர்க்கரசனே!; பூங்குலாய் விரிந்த சோலை - மலர்கள் நிறைந்து மலரப்பெற்ற
சோலைகள்; பொழிமதுத் திவலை தூவ - பெருகுகின்ற தேன் துளிகளைச்
சிந்தும்படியாகவும்; கோங்கு எலாம் - கோங்க மரங்கள் எல்லாம்; குணம் இலார்
செல்வமேபோல் - நற்குணங்களில்லாதவர்களிடத்திலே பொருந்திய செல்வத்தைப் போல;
கமழமாட்டா - மணத்தை வெளிப்படுத்தாதனவாய்; பாங்கு எலாம் செம்பொன் பூப்ப -
பக்கங்களில் எல்லாம் செவ்விய பொன்னிறமான பூக்களைப் பூப்ப; பருவம் விரிந்தது
என்றாள் - வேனிற்காலம் வந்து பரவியது என்று கூறினாள், (எ - று.)