பக்கம் : 127
 
கோங்குமலர்களின் மணம் சிறப்புடையதன்று, எனவே அதன் மணத்திற்கு
நற்குணமில்லாதவர்களுடைய செல்வம் உவமை கூறப்பட்டது. குணமிலார் செல்வத்திற்குக்
கமழமாட்டாமை புகழ்பெற மாட்டாமையாகும்.
 

( 43 )

வண்டுகள் களிப்பு

162. வேய்ந்திண ரொசிந்த சோலை 1வேனிலான் வென்றி யோகைத்
தேந்துணர் கொடுப்ப 2மூழ்கித் தேறல் 3வாய்நெகிழ மாந்தித்
தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் 4டூறு மேரார்
மாந்துண ரொசிய வேறி மதர்த்தன மணிவண் டெல்லாம்.
 

     (இ - ள்.) இணர் - பூங்கொத்துக்களை; வேய்ந்து - தம் மேலே
மிகுதியாகக்கொண்டு; ஒசிந்த சோலை - அந்தச் சுமையைத் தாங்கமாட்டாமல் துவளப்பெற்ற
மரங்களையுடைய பொழில்; வேனிலான் வென்றி ஓகைதேந்துணர் கொடுப்ப - காமனது
வெற்றிக்குக் காரணமான களிப்பை விளைவிக்கின்ற தேனையுடைய மலர்களைக் கொடுக்க;
மூழ்கி - அம்மலர்களில் மூழ்கி; தேறல் வாய்நெகிழ மாந்தி - அவற்றிலுள்ள தேனைக்
கடைவாய்வழியே வழியுமாறு மிகுதியாகக் குடித்து; தாந்துணர் துணையோடு ஆடி - தாம்
அப்பூந்தாதுகளில் தம் வாழ்க்கைத் துணையான பெண்வண்டுகளுடனே விளையாடி; சாறு
கொண்டு ஊறும் ஏர்ஆர் மாம்துணர் ஒசிய ஏறி - தேன் இடை விடாமற் சுரக்கப்பெற்ற
அழகுபொருந்திய மாமரத்தின் பூங்கொத்துக்கள் முறியும்படி அவற்றின்மேலே மிகுதியாக
ஏறியமர்ந்து; மணிவண்டு எல்லாம் - கருநிறமுள்ள வண்டுகளெல்லாம்; மதர்த்தன -
களிப்பையடைந்தன, (எ - று.)

     வண்டுகள், மூழ்கி, மாந்தி, ஆடி, ஏறி, மதர்த்தன என்க. சித்திரை வைகாசி
மாதங்களாகிய இளவேனிற்காலத்தே காமனுக்குப் போர்த் தொழிலில் ஊக்கமும் களிப்பும்
உண்டாதல்பற்றி அவனுக்கு ‘வேனிலான்‘ என்று ஒரு பெயர் உண்டாயிற்று; வேனிற்
பருவத்திற்கு உரியவன் என்க.

( 44 )


     (பாடம்) 1. வேனலான். 2. மூள்கி. 3. வாய் தெகிழ மாந்தித் 4. டூறுமேரா.