பக்கம் : 1279
 

பொருள் பெற்றவர்கள் அதனை ஒப்புதற் பொருட்டு உலோப குணமுடையராதல் ஒருதலை.
உலோபம் உண்டாயவழி அதன் இனமாகிய எல்லாக் குற்றங்களும் உளவாம் குற்றங்களே
மிகும்பொழுது நற் குணங்கள் தேய்ந்தொழியும், மேலும் செருக்குமிக்கு அறிஞரையும்
தூற்றும்படி செய்யவல்லது பொருள் என்க.
 

( 16 )

 

2085. 1அப்பெனு நெடியகட் கணிகை 2யார்தமை
நம்பிய விளையவர் 3பொருளி னையுமால்
வம்பின மணிவண்டு வருடுந் தாமரைக்
கொம்பினை மகிழ்ந்தவர் குணங்க ளென்பவே.
 
     (இ - ள்.) அம்பு எனும் நெடியகண் கணிகையார் தமை - அம்பை ஒத்த நீண்ட
விழிகளையுடைய வரைவின் மகளிரை, நம்பிய - விரும்பிய, இளையவர் -
இளங்காளையருடைய, பொருளின் - பொருள் அழிவதுபோல, வம்புஇன மணிவண்டு
வருடும் - புதிய உயரிய நீலமணிபோன்ற வண்டுகள் கிண்டுகின்ற, தாமரைக் கொம்பினை -
செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பூங்கொம்பை ஒத்த திருமகளை, மகிழ்ந்தவர் -
விரும்பியவர்களின், குணங்கள் நையும் என்ப - நற்குணங்கள் அழிந்தொழியும் என்று
சான்றோர் கூறுவர், ஆல், ஏ : அசைகள், (எ - று.)
வம்பு - மணமுமாம்.

     கணிகை மகளிர்களை விரும்புகின்றவர்கள் அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு
அம்மகளிரின் விருப்பப்படி தம் பொருள்களை அழித்து வறிய ராதல் போன்று, பொருட்
செல்வத்தை விரும்புகின்றவர்களும் அப் பொருளைக் காத்தற்கு இன்றியமையாத உலோப
முதலிய தீக்குணங்களையே வளர்த்துவர, அவர்பாலமைந்த அன்பு, ஈகை முதலிய
நற்குணங்கள் நாடோறும் தேய்ந்தொழியும் என்பதாம்.

     கணிகையரை நம்பிய இளைஞர் பொருள்போன்று, திருமகளை மகிழ்ந்தவர்
நற்குணங்கள் தேய்ந்தொழியும் என்க.
 

( 17 )

 

2086. ஆதலா லவடிறத் தன்பு செய்யன்மின்
ஏதிலா ரெனவிகழ்ந் தொழியும் யாரையும்
காதலா ராபவர் கற்ற மாந்தரே
போதுலா மலங்கலீர் புரிந்து கேண்மினே.
 
     (இ - ள்.) ஆதலால் - திருமகள் தன்மை இத்தகைத்தாகலால், அவள் திறத்து அன்பு
செய்யன்மின் - அவளிடத்தே கழி பெருங் காதல் கொள்ளா தொழியுங்கோள், யாரையும் -
கல்லாத புல்லராய எத்திறத்தாரையும், ஏதிலார் என இகழ்ந்து ஒழியும் - பகைவரைப்
போன்று கருதி அவர் தம் கூட்டத்தை இகழந்து அகன்றொழியுங்கோள், கற்ற மாந்தரே -
மெய்ந்நூல்களைப் பயின்ற சான்றோர்களே, காதலர் ஆபவர் - நும்மால் விரும்புதற்குத்
தக்கராவர், போதுலாம் அலங்கலீர் - மலர்பொருந்திய மாலையையுடையீர், புரிந்து
கேண்மின்- யாங் கூறுவனவற்றை விரும்பிக் கேளுங்கள், (‘எ - று.)

 


     (பாடம்) 1 அம்பென. 2 மார்களை. 3 பொருளு நையுமல்.