பக்கம் : 1289
 

 

2102. காதல 1ராயினுங் காதல் கையிகந்
தேதில 2ராயின மடிகட் கின்றென
ஊதுலை மெழுகினின் றுருகி னாரவர்
போதலர் கண்களும் புனல்ப டைத்தவே.
 
     (இ - ள்.) காதலர் ஆயினும் - எளியேங்கள் காதல் கொள்ளற்குரிய மக்களாய்
இருந்தேயும், காதல் கையிகந்து - அக்காதல் ஒழிக்கப்பட்டு, இன்று - இற்றைக்கு, அடிகட்கு
- எம் தந்தைக்கு, ஏதிலராயினம் - அயலாராய் ஆகிவிட்டோம், என - என்று கூறி, ஊது
உலை மெழுகின் - ஊதப்பட்ட கொல்லுலைத் தீயின் இட்ட மெழுகைப் போன்று, நின்று
உருகினார் - நின்ற நிலையில் நின்றே உளம் உருகுவாராயினர், அவர் - அவர்களுடைய,
போது அலர் கண்களும் - செந்தாமரை மலர்ந்தாலொத்த கண்களும், புனல் படைத்த -
துயர் மிகுதியால் நீரைப் பெருக்கின, (எ - று.)

     தனது துறவுக்கோலத்தைக் கண்டு அலறி அழுகின்ற தம்பால் பரிவு காட்டாத பயாபதி
எமக்கு இன்று தொடர்பில்லாத அயலார்களைப் போலவே ஆயினர் என்று கூறி
விசயதிவிட்டர்கள் வருந்தினர் என்பதாம்.
 

( 34 )

விசயதிவிட்டர்கள் பயாபதியைப் பிரிந்து போதல்

2103. முடிகெழு மன்னர்முன் னிறைஞ்ச நம்மைத்தம்
கடிகம ழகலத்துக் கொண்ட 3காதலெம்
அடிகளு மயலவர் போல வாயினார்
கொடிதிது பெரிதெனக் குழைந்து போயினார்.
 
     (இ - ள்.) முடிகெழு மன்னர் முன் இறைஞ்ச - முடியணிந்த அரசர்கள் தமது
அடிமுன்னர் வீழ்ந்து வணங்காநிற்ப, நம்மைத் தம் கடி கமழ் அகலத்துக் கொண்ட -
நங்களைத் தமது நறுமணங்கமழும் மார்பிடத்தே பொருந்தத் தழீஇக் கொண்ட, காதல் எம்
அடிகளும் - அளவிறந்த காதற் பெருக்குடைய எம்முடைய தந்தை தாமும், அயலவர் போல
ஆயினார் - அன்புரிமை சிறிதுமில்லாத ஏதிலாரைப் போல மாறிவிட்டனர், இது பெரிது
கொடிது - இச்செயல் பெரிதும் கொடிய தொன்றாயிருந்தது, எனக் குழைந்து போயினார் -
என்று கூறி உள்ளம் நெகிழ்ந்து அவணின்றும் அகன்று செல்வாராயினர், (எ - று.)

     அன்புடமை சிறந்த பண்பாகவும், தம்மிடத்தே அன்பின்றி அயலார் போன்று
பயாபதிமன்னன் இருத்தல் மிகக் கொடுமையே ஆகும் என்று கூறி அழுது
விசயதிவிட்டர்கள் சென்றனர் என்க.
 

( 35 )


     (பாடம்) 1 மாயினங். 2 மாயின. 3 காதலேம்.