பக்கம் : 1291 | | பயாபதிக்கு அறவுரை கூறிய துறவியார், விசயதிவிட்டர்களை நோக்கி, ‘உங்கள் தந்தை, மேற்கொண்டுள்ள செயல் அவர்க்கு மேலும் நன்மையே விளைவிக்கும் ஆதலின் இச்செயல் தொடங்கியதற்குப் பெரிதும் மகிழவேண்டும், அப்படி இருக்கவும் நீங்கள் இவ்வண்ணம் துயருறுதல் தகுதியாகாது‘ என்று கூறித் தேற்றினார் என்க. | ( 37 ) | விசயதிவிட்டர் முனிவரை வணங்குதல் | 2106. | அணங்குசா லடிகள தருள தாய்விடில் பிணங்கிநாம் பிதற்றிய பேதை வாய்மொழி குணங்கடா மல்லகோன் குறிப்பு மன்றென வணங்கினார் மணிமுடி 1மான வீரரே. | (இ - ள்.) அணங்குசால் அடிகளது அருள் அதாய் விடில் - அழகுநிறைந்த அடிகளுடைய கருத்து அவ்வாறாயின், நாம் பிணங்கிப் பிதற்றிய பேதை வாய்மொழி - யாம் அவர் கருத்தின் மாறுபட்டுப் பேசிய அறிவுக்குப் பொருந்தாத வாய் அளவானே அமைந்த வெற்றுரைகள், குணங்கள்தாம் அல்ல - பண்புடையன வல்ல, கோன்குறிப்பும் அன்று - அரசரின் திருவுளக்குறிப்புப் பொருத்தமும் அன்று, என - என்று கூறி, வணங்கினார் - முனிவரைத் தொழுதார்கள், மணிமுடி மான வீரர் - மணிகளாலியன்ற முடியை அணிந்த மானம் போற்றும் வீரர்கள், (எ - று.) தம் தந்தை துறந்தமை கொடுமை யென்று கூறிய விசயதிவிட்டர்கள், அவ்வாறு தாம் கூறுவதற்குக் காரணம் தம்முடைய அறியாமையே என்றுணர்ந்து தம் தந்தை தம்மொழிகளால் வருந்துவரோ என்று பரிவு கூர்ந்து முனிவரை வணங்கிச் சென்றனர் என்பதாம். | ( 38 ) | விசயதிவிட்டர்கள் நகரடைதல் | 2107. | திருவுடை யடிகடஞ் சிந்தைக் கேதமாம் பரிவொடு பன்னிநாம் பயிற்றி லென்றுதம் எரிவிடு சுடர்முடி யிலங்கத் தாழ்ந்துபோய் மருவுடை வளநகர் மன்னர் துன்னினார். | (இ - ள்.) திருவுடை அடிகள் தம் சிந்தைக்கு ஏதமாம் - வீட்டின்பமாகிய செல்வமுடைய அடிகளாரின் திருவுளத்திற்குக் குற்றமாய்த் தோன்றும், நாம் பரிவொடு பன்னிப் பயிற்றில் - யாம் எமக்குற்ற வருத்தத்தோடே பலபடப் பாரித்துப் பேசில், என்று - என்று கருதி, தம் எரிவிடு சுடர் முடி இலங்கத் தாழ்ந்து - தம் ஒளி விட்டுச் சுடர்கின்ற முடி திகழும்படி வணங்கி, போய் மருவுடை வளநகர் மன்னர் துன்னினார் - சென்று மணமிக்க தம் வளநகரத்தை அவ்வரசர்கள் அடைந்தனர், (எ - று.) | | | (பாடம்) 1 மன்ன. | | |
|
|