பக்கம் : 1300
 

     அனந்தஞான்மை விழுநிதி என்றது - கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி,
கடையிலா இன்பம், கடையிலா வீரியம், என்னும் நான்கினையும் என்க.
 

( 51 )
பயாபதி கேவலமடந்தையை மணத்தல்
2120. நெடிதுட னாய தெவ்வர் நால்வரை நீறு செய்திட்
டடிகள்பின் முடிவென் 1பாளை யகப்படுத் தனைய ராக
இடிமுர சதிருந் தானை யரசரோ டிங்க ணீண்டிக்
கடிகம ழமரர் வீரன் கடிவினை முடிவித் தாரே.
 
     (இ - ள்.) நெடிது உடன் ஆய தெவ்வர் - நீண்டகாலமாகத் தன்னுடனே
பகைத்துறைந்த பகைவர்களாகிய, நால்வரை நீறு செய்திட்டு - ஞானாவரணீயம் முதலிய
காதிகர்மங்களாகிய நான்கு வீரர்களையும் சுட்டெரித்துத் துகளாக்கி, பின் - அதன் பின்னர்,
அடிகள் - பயாபதி அடிகளார், முடிவு என்பாளை - முடிபொருள் என்பவளாகிய கேவல
ஞானத்தை, அகப்படுத்து - தன் வயப்படுத்திக்கொண்டு, அனையராக - அவ்வுயரிய
நிலையினை உடையராகிவிட, அரசரோடும் - ஏனைய தவவேந்தர்களோடும், இடிமுரசதிரும்
தானையோடு - இடி போன்று முரசங்கள் முழங்காநிற்கும் தம் படைகளோடும், இங்கண்
ஈண்டி - இப்பயாபதி அடிகளார்பால் வந்து நெருங்கி, கடிகமழ் அமரர் - மணம்மிக்க
தேவர்கள், வீரன் கடிவினை முடிவித்தார் - வீரனாகிய பயாபதி வேந்தற்குக்
கேவலமடந்தையோடு உளதாகிய திருமண வினையை நிகழ்த்தினார், (எ - று.)
“நெடி துடனாய தெவ்வர் நால்வர்“ என்றது முதற் செய்யுளிற் கூறிய “யீரிருவர்“ என்றதை
அநுவதித்தபடியாம்.
கடிவினை என்றது மகாநிர்வாணத்தை.
 

( 52 )

இதுவுமது

2121. கொடிகளுங் குடையுங் கோலக் கவரியு மமரர் தங்கள்
முடிகளு மடந்தை மாரு முகிழ்நகைக் 2கலங்க ளுஞ்செற்
றடியிடு மிடமின் றாகி மூடியா காய மெல்லாம்
கடிகமழ் மலருஞ் சாந்துஞ் சுண்ணமுங் கலந்த வன்றே.
 
     (இ - ள்.) கொடிகளும் குடையும் கோலக் கவரியும் - கொடி குடை அழகிய சாமரை
முதலியனவும், அமரர் தங்கள் முடிகளும் - தேவர்களுடைய முடியணிகலன்களும், மடந்தை
மாரும் - தேவமகளிரும், முகிழ் நகைக் கலன்களும் - அவர் தம் ஒளி விடுகின்ற
அணிகலன்களும், செற்று - செறிவுற்று, அடியிடும் இடமின்றாகி - அடியிடுதற்குத் தானும்
இடமில்லாதபடி, மூடி - மூடப்பட்டு, ஆகாயம் எல்லாம் - விசும்பு முழுதும், கடிகமழ்
மலரும் சாந்தும் - நறுமணங் கமழுகின்ற மலர்களும் சந்தனக் குழம்பு முதலியனவும்,
சுண்ணமும் - மணப் பொற் சுண்ணங்களும், கலந்த - நிறைந்தன, அன்றே : அசை,
(எ - று.)
 

     (பாடம்) 1 பானை. 2 கலங்கள் செற்றி.