பக்கம் : 1301
 

     செயற்கரிய செயலாகிய பொறியடக்கல் முதலியவற்றைச் செய்து வெல்லுதலே
பேராண்மை யாகலின் அவ்வாறு பொறிகளை வென்றுயர்ந்த துறவிகளை இந்திரன்
முதலியோர் வணங்குதல் மரபு என்க.
 

( 53 )
இதுவுமது
2122. பொன்னரி மாலை பூவின் பொழிமதுப் பிணையன் முத்தின்
1மின்னிவர் விளங்குந் தாம மெனவிவை விரவி வீசித்
துன்னிய வினைவர் கூட்டந் துணித்துவீற் றிருந்த கோனைப்
பன்னிய துதிய ராகி யமரர்கள் பரவு கின்றார்.
 
     (இ - ள்.) பொன்னரி மாலை - பொன்னாலியன்ற அரிமாலையென்னும் அணியும்,
பூவின் பொழிமதுப் பிணையல் - பூவானியன்ற தேன்துளிக்கும் மாலையும், முத்தின் மின்
இவர் விளங்கும் தாமம் - முத்தானியன்ற ஒளி தவழ்ந்து திகழும் மாலையும், என இவை
விரவி வீசி - என்னும் இம்மாலைகளை விசும்பிற் கலக்க வீசினராய், துன்னிய வினைவர்
கூட்டம் - நெருங்கிய வினைப் பகைவரையும் அவர்க்கினமாய கூட்டத்தாரையும், துணித்து -
கொன்றழித்து, வீற்றிருந்த கோனை - வாகை சூடி வீற்றிருந்த துறவியர் வேந்தனாகிய
பயாபதியை, அமரர்கள் - தேவர்கள், பன்னிய துதியராகி - பலபடப் பாராட்டிய
வாழ்த்துடையராய், பரவுகின்றார் - புகழ்வாராயினர், (எ - று.)

     நல்வினையாதல், தீவினையாதல் செய்தற்குக் காரணம் அவாவே ஆகும்.
அவ்வவாவுடையார்க்குச் சினம் முதலிய எல்லாக் குற்றங்களும் உளவாம். ஆதலின்
இவ்வழுக்குகளை வினைவர் கூட்டம் என்று கூறினர் என்க.
 

( 54 )

தேவர்கள் பயாபதி முனிவனைப் புகழ்ந்து பாடுதல்
வேறு
2123. கருமால் வினையரசு காறளர நூறிப்
பெருமான் முடிவென்னும் பெண்ணரசி தன்னை
ஒருவாமை வேட்டெய்தி யூழி பெயர்ந்தாலும்
வருமா றிலாத வளநகரம் புக்கானே.
 
     இது முதல் மூன்று செய்யுள் ஒரு பொருள் மேலடுக்கி வந்தன.
 

     (பாடம்) 1 மின்னவா.