பக்கம் : 1305
 

     (இ - ள்.) அருமால் வினை அகல - கடத்தற்கரிய மயக்கத்தைப் பற்றி வருகின்ற
இருவினைத் தொடர்பு அகன்றொழியவும், அமரர் நாளும் அடிபரவ - தேவர்கள் நாடோறும்
தன் திருவடிகளை வாழ்த்தவும், பெருமான் பிரசாபதி - பெரியோனாகிய பயாபதி அடிகள்,
பிரமலோகம் இனிது ஆள - வீட்டுலகத்தை இனிதாக ஆட்சி செய்யாநிற்ப, திருமால் -
திருமாலாகிய திவிட்டமன்னன், பெருநேமி திகழ்ந்த - பெரிய ஆழிப்படை விளங்காநின்ற,
செந்தாமரைத் தடக்கை - செந்தாமரை மலர் போன்ற தன் பெரிய கைகளாலே, கருமால்
கடல் வரைத்த - கரிய பெரிய கடலை எல்லையாக உடைய, கண்ணார் ஞாலம் - இடம்
அகன்ற இவ்வுலகங்களை, காக்கின்றான் - இனிதே ஓம்பா நின்றான், (எ - று.)

பயாபதி மன்னன் வீட்டுலகினையும் அவன் மகன் மண்ணுலகினையும் ஒருங்கே ஆட்சி
செய்தனர் என்றபடி. கடல் வரைத்த - கடல்களை எல்லையாகவுடைய, எனவே
உலகமுழுதும் என்றபடி.
 

 ( 60 )

திவிட்டன் உலகாள்தற் சிறப்பு

2129. தங்கோ னமருலக 1மினிதி னாளத் தரங்கநீர்ப்
பொங்கோ 2தம துடுத்த பூமி யெல்லாம் பொதுநீக்கிச்
செங்கோ லினிதோச்சித் தேவர் காப்பத் திருமாலும்
3அங்கோல் வேலரச ரடிபா ராட்ட 4வாள்கின்றான்.
 
     (இ - ள்.) தங்கோன் அமருலகம் இனிது ஆள - தம் தலைவனாகிய பயாபதி
வீட்டுலகத்தை இனிதாக ஆளாநிற்ப, தரங்கம் நீர் பொங்கு ஓதமது உடுத்த பூமி எல்லாம் -
அலைகளையுடைய நீர் பொங்குகின்ற முழக்கமுடைய கடலை ஆடையாக உடுத்துள்ள
நிலவலயம் முழுதையும், பொது நீக்கி - பலருக்கும் பொது என்னும் மொழி நிகழாதவாறு
அகற்றித் தனக்கே உரிமையாக்கி, செங்கோல் இனிது ஓச்சி - செங்கோன்மை பிறழாதபடி
முறை செய்து உயிர்கள் இன்புறும்படி அரசு செலுத்தி, தேவர்காப்ப - தன்னைத்
தெய்வங்கள் பாதுகாவா நிற்ப, திருமாலும் - திவிட்டமன்னனும், அங்கோல் வேல் அரசர்
அடி பாராட்ட - அழகிய செங்கோன்மையும் வேலும் உடைய மன்னர்கள் தனது
திருவடியைப் புகழ்ந்து வாழ்த்தா நிற்ப, ஆள்கின்றான்-ஆட்சி செய்யா நின்றான், (எ - று.)

     பொது நீக்குதல் - இம்மண்ணுலகம் பல அரசற்கும் பொதுவானது என்னும் சொல்லை
அகற்றுதல். ஒரே குடையின்கீழ்த் தனக்கு உரிமையாக இம்மண்ணுலகம் முழுதையும் ஆட்சி
செய்தான் என்பது கருத்து.
 

     (பாடம்) 1 மினிது மாளத். 2 ம்புடையுடுத்த. 3 அங்கோல. 4 வாழ்கின்றான்.