பக்கம் : 138
 
     அரசன் தன்னுடைய காதன் மகளிரைப் பார்த்து, அசோகமரத்தின் தளிர்கள்
அவர்களுடைய கைகளைப்போல் இருக்கின்றன என்றும், குருக்கத்தியின் புத்திளங்
கொடிகள் அவர்களுடைய இடைகளைப்போல இருக்கின்றன என்றும் நலம்
பாராட்டுகின்றான். பிண்டியும் குருக்கத்தியும் அவர்களுடைய கைகளையும் இடைகளையும்
பார்த்து முறையே தளிர்களையும் புதுக் கொடிகளையும் ஈனுகின்றன என்னுஞ் சிறப்பால்
அம்மாதர்களின் பேரழகு தெள்ளிதிற் புலனாகும்.
 

( 57 )

மாந்தளிர் முதலியவை

176. 1மாந்தளிரிங் கிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே
2ஏந்திளந்தீங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே
3தேந்தளங்கு குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கித்
4தாந்தளிர்மென் முருக்கினிய தாதோடு ததைந்தனவே.
 

     (இ - ள்.) தேன் தளங்கு குழலீர் - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலை
யுடையவர்களே!; இங்கு - இச்சோலையில்; மாந்தளிர் இவை - இந்த மாமரத்தின்
தளிர்களானவை; நுமது நிறங்கொண்டு வளர்ந்தன - உங்களுடைய உடல்நிற அழகைத்
தாம்பெற்று வளர்ந்திருக்கின்றன; ஏந்து இளந் தீங்குயில் இவை - சிறந்த இளமையான
இனிய குரலையுடைய இக்குயில்கள்; நும் சொல் கற்பான் இசைந்தன - உங்களுடைய
சொற்களின் இனிமையைக் கற்றுக்கொள்வதற்காக இங்குவந்து பொருந்தியுள்ளன; தளிர்மெல்
முருக்கு - தளிரினையுடைய மெல்லிய பலாச மரங்களானவை; நும் செவ்வாயின் எழில்
நோக்கி - இயற்கையாகவே சிவந்துள்ள உங்களுடைய சிவந்த வாயின் அழகைப் பார்த்து;
தாம் - தாமும்; இனிய தாதோடு ததைந்தன - இனிமைமிக்க மலர்களுடன் நிறைந்துள்ளன.
(எ - று.)

     இதனால் அரசன் மாந்தளிர் நிறத்தினும் நுமது மேனிநிறம் சிறந்ததென்றும், குயிலின்
குரலினும் நுமது குரல் இனியதென்றும், முருக்கு மலரினும் நுமது வாயிதழ் சிவந்ததென்றும்
தன் மனைவியரின் நலத்தைப் பாராட்டினான். தளங்கு - தழங்கு என்பதன் போலி.

( 58 )


     (பாடம்) 1 மாந்தளிரிவை 2. ஏந்திளங் குயிலிவை. 3. தேந்தளங்குழலீர். 4. தாந்தளிர்
முருக்களிய தாதொடு.