(இ - ள்.) தூவி - இறகினையுடைய, அரும் கிளி அன்ன - அரிய கிளியைப் போன்ற; சொல்லினீர் - சொற்களையுடைய பெண்காள்!; (நான் கூறுவதைக் கேளுங்கள்) நளி வாவியும் - குளிர்ச்சியுடைய தடாகத்திடமும்; மண்டபம் - நீராழி மண்டபத்திடமும்; காவியும் - குவளையும்; செங்கழு நீரும் - ஆம்பலும்; கமலமும் - தாமரையும்; கண்விரிந்து - உங்களுடைய கண்களைப்போல மலர்ந்து; எழில் மதனனையும் மருட்டும் - அழகிய காமனையும் மருளச்செய்வதாக விளங்குகின்றன ஆதலால்; இவ் இளவேனில் - இந்த இளவேனிற் காலத்திலே; துணையில்லார் - (ஆடவர் மகளிர் என்பார் தத்தம் காதலுக்குரியவராகிய) துணையினைப் பெற்றிராதார்; ஆவி உய்ந்துள்ளார் ஆதல் அரிது-உயிரோடு பிழைத்திருப்பவராதல் அரிது. (எ- று.) இளவேனிற் காலத்தில், காமவேட்கையை மிகுவிக்கக் கூடிய மலர்கள் மிகுதியாக மலர்ந்து; அழகிய காமனையும் மயங்கச்செய்வதாக விளங்கு கின்றமையின், காதலுக்குரியாரைப் பிரிந்து தனித்திருப்போர் உயிர்கொண்டு வாழ்தல் அருமை, என்று அரசன் தன் மனைவியர்க்கு உணர்த்தினான். |