(இ - ள்.) மெய் மயிர் எறிந்து - சுவலனசடியரசனானவன் உடம்பில் மயிர் சிலிர்க்கப்பெற்று, ஒளிதுளும்பும் மேனியன் - ஒளிவிளங்கும் உடலையு டையவனாய்; கை முகிழ் முடித்தடம் கதழச் சேர்த்தினான் - தாமரை யரும்பு போன்ற குவிந்த தனது கைகளைத் தன் தலைமீது விரைவாகக் குவித்து; வெம்மை செய் வினைத்துகள் விளியவென்றவன் - தீமையைச் செய்கின்ற இருவினைத் தூள்கள் பறந்தோடிக் கெடுமாறு வென்றவனான அருகக் கடவுளது; செம்மலர்த் திருந்தடி - செந்தாமரை மலர் போன்ற அழகிய அடிகளை; சீரின் ஏத்தினான் - சிறப்பாகப் போற்றினான். (எ - று.) உடம்பில் மயிர்க்கூச் செறிதலும், உடம்பின் இயற்கையொளி மிகுதலும் அன்பினாலாகும் மெய்ப்பாடுகள். குவித்த கைகளை விரைவாகத் தலைமீது கொண்டான் என்பது இரண்டாம் அடிக்குப் பொருள். |
( 63 ) |
வேறு வரிப்பாட்டு எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல் |
182. | அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும் அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே. |
(இ - ள்.) அணியாதும் - யாதோர் அணிகலனையும் அணிந்துகொள்ளாமலிருந்தும்; ஒளிதிகழும் - இயற்கையொளி விளங்கப்பெறும்; அணங்கு ஆர் திருமூர்த்தி - அழகு நிறைந்த சிறந்த வடிவத்தை யுடையவனே!; கணியாது முழுதுணர்ந்த கடவுள் என்று அறையும் - இயல்பாகவே எல்லாவற்றையும் அறிந்த கடவுள் என்று நூல்கள் உன்னைக்கூறா நிற்கும்; கணியாது முழுது உணர்ந்த கடவுள் என்று அறைந்தாலும் - அவ்வாறு இயல்பாகவே எல்லாவற்றையும் அறிந்த கடவுள் என்று நூல்கள் உன்னைக் கூறினாலும்; அணிஞாலம் உடையாயை - அழகிய உலகங்கள் எல்லாவற்றையும் உரிமையாகவுடைய நின்னை; அறிவாரோ அரியர் - உள்ளபடியாக வுணர்பவரோ உலகத்தில் மிகவும் அருமையானவராவர். (எ - று.) |