பக்கம் : 145
 
     (இ - ள்.) ஏந்தல் - அரசனானவன்; இன்னணம் இறைவனை ஏத்தி - இவ்வாறு
அருகக்கடவுளைப் போற்றி; தன் சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன் - தனது முடியில்
அணிந்துகொண்ட எஞ்சிய மலர்களையுடைய வனாய்; கல்நவில் திருவணிக் கபாடம்
தாழ்உறீஇ - மணிகள் பதிக்கப்பெற்ற வையும் ஒலிக்கும் அழகிய மணிகளமைத்தவையுமான
கோயிற் கதவுகளைச் சாத்தித் தாளிட்டு; முன்னிய திருநகர் முற்றம் முன்னினான் - எண்ணி
வழிபட்ட திருக்கோயிலின் முன்னிடத்தை யடைந்தான், (எ - று.)

     சேடப்பூ - கடவுள் அடிகளில் பூசித்த பின் அக்கடவுளின் அருட் பொருளாகப்
பெற்றுக்கொள்ளும் பூ; இதனை நிர்மாலியம் என்பர். அரசன் கடவுள் வழிபாட்டை
முடித்துக்கொண்டு திருக்கோவிலைப் பூட்டிக்கொள்ளு மாறு செய்து வெளிப்பட்டனன் என்க.

( 67 )

சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்

186. ஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச்
சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன்
1ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம்
சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார்.

     (இ - ள்.) ஆயிடை - அப்போது; சாரணர்கள் - இரண்டு சமண முனிவர்கள்; ஆர்
அணங்கு அவிர் ஒளி எரிய - பொருந்திய தெய்வத் தன்மை விளங்குகின்ற ஒளி
மிகுதிப்படுமாறு; விசம்பினின்று இழிந்து - விண் ணினின்று இறங்கிவந்து; தாதைதன் -
எல்லோருக்குந் தந்தையாக விளங்கும் அருகக் கடவுளின்; ஏர் அணி வளநகர்
வலம்கொண்டு - அழகு பொருந்திய சிறப்புள்ள திருக்கோயிலை வலஞ்செய்து; இன்னணம்
- இவ்வாறு; சீர்அணி மணிக்குரல் - நன்கு ஒலிக்கும் மணியொலி போன்ற குரலானது;
சிலம்ப வாழ்த்தினார் - முழங்கும்படியாகப் போற்றலானார்கள், (எ - று.)

     அரசன் கோயிலைவிட்டு வெளிப்படுஞ் சமயத்தில் சாரணர் இருவர் விண்ணில்
நின்றும் இழிந்து திருக்கோயிலை வணங்கி வாழ்த்தினர். சாரணர் விண்ணிற் போக்கு வரவு
செய்யுஞ் சமண முனிவர்கள். அவர்கள், தலசாரணர், ஐலசாரணர், பலசாரணர்,
புஷ்பசாரணர், தந்து சாரணர், சதுரங்குலசாரணர்,

 


     (பாடம்) 1 தேரணி.