பக்கம் : 147
 

இதுவுமது

188.

முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றா
யருகணங்கி 1யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே.
 

     (இ - ள்.) முருகு அணங்கு தாமரையின் மொய்ம் மலர்மேற் சென்றாய் -
மணத்தையுந் தெய்வத் தன்மையையுமுடைய தாமரையின் நெருங்கிய இதழ்களையுடைய
மலர்மேல் நடந்தருளினாய்; அருகு அணங்கி ஏத்தியது - யாம்நின் அருகில் அடைந்து
போற்றியதை; மகிழ்வாய் இல்லை - மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வோயல்லை; அது மகிழ்வாய்
அல்லை எனினும் - நீ அப்போற்றுதலுக்காக மகிழ்வோய் அல்லை என்றாலும்; பெயராக்கதி
மகிழ நின்றாய்கண் - நின்னடியார்கள் மற்றீண்டு வாராநெறி அமர்ந்து மகிழும் படி நின்ற
நின்னிடத்திலே; காதல் ஒழியோம் - நாங்கள் அன்பு நீங்க மாட்டோம், (எ - று.)

     முருகு, - மணத்தையே அன்றி அழகையும் தேனையும் உணர்த்தும். அணங்கி
என்பதற்குச் சேர்ந்து என்று பொருள் உரைக்கப்பட்டது. அணங்கி அருகு ஏத்தி என்று
மொழிமாற்றி; வருத்தமுற்று உனது அண்மையிலடைந்து போற்ற என்று உரைப்பினுமாம்.

( 70 )

இதுவுமது
189. மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே.
 

     (இ - ள்.) வான்வணங்க - விண்ணவர்கள் போற்ற; மணம்மயங்கு தாமரைமேல்
சென்றாய் - மணம் நிறைந்த தாமரை மலரின்மேல் நடந்து சென்றருளினாய்; குணம்மயங்கி
யாம்பரவ - உன்னுடைய குணங்களால் நாங்கள் அன்பிலமிழ்ந்து போற்றுதலைச் செய்ய;
கொண்டு உவப்பாய் அல்லை - அதனை ஏற்றுக்கொண்டு நீ மகிழ்வோயல்லை; கொண்டு
உவப்பாய் அல்லை எனினும் - அவ்வாறு ஏற்றுக்கொண்டு நீ மகிழ்வோயல்லை


     (பாடம்) 1. யேத்தவது.