பக்கம் : 153
 
அரசனுக்கு வாழ்த்துக்கூறிய முனிவர்கள் அரசனைப் பார்த்து, “உன் தோள்கள் இனிதாக
விளங்குகின்றனவோ?“ என்று கேட்க அரசன் தலைவணங்கி முனிவர்களைப் போற்றினான்
என்பதாம். திருவடிகளை வாழ்த்துவதைப்போல் தோள்களைக் குறித்து நலம் வினாதலும்
தலையால் வணங்கிப் பதிலுரைத்தலும் மரபு.

          “உரிமை தன்னொடும் வலங்கொண் டோங்குசீர்த்
          திரும கன்பணிந் திருப்பச் செய்தவர்
          இருநில மன்னற் கின்ப மேயெனப்
          பெருநில மன்னன் பெரிதும் வாழ்த்தினான்“

என்னும் சிந்தாமணியையும் ஈண்டு ஒப்பு நோக்குக. வணங்கி வாழ்த்துதல், தன்னாற்
பணியப் பெறுவார் எத்தகைய கேடு மற்றோராய் நீடு வாழவேண்டு மென்னும் ஆர்வத்தைப்
புலப்படுத்துவது.
 

( 77 )

சடியரசன் வணங்கிக் சகநந்தனனை நோக்கிக் கூறுதல்

196. முனிவருட் பெரியவன் முகத்து நோக்கியொன்
றினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும்
பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனியமற் றின்னணங் கடவுள் கூறினான்.
 

     (இ - ள்.) முனிவருள் பெரியவன் முகத்துநோக்கி - அச்சமண முனிவர்களிருவரிற்
பெரியவனாக உள்ளோனது முகத்தைப் பார்த்து, அடிகள் - அடிகளே!, இனிது
உணர்த்துவது ஒன்று உளது - இனிமையாக அடியேன் தெரிவிக்க வேண்டியது ஒன்று
இருக்கின்றது, என்றலும் - என்று சுவலன சடியரசன் கூறுதலும், பனிமலர்த் தாமரைப்
பழனநாடனை - குளிர்ந்த தாமரை மலர்களையுடைய கழனிகள் சூழ்ந்த நாட்டை
யுடையனாகிய அரசனைப் பார்த்து, கடவுள் - அம்முனிவன், கனிய - அன்பினால் மனம்
நெகிழ, இன்னணம் கூறினான் - இவ்வாறு சொல்வானானான், (எ - று.) மற்று: அசை.
     அரசன் முனிவர்களிற் பெரியவனாக உள்ளவனுடைய முகத்தைப் பார்த்து, “அடியேன்
தெரிவித்துக்கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது“ என்று கூறினான். முனிவர்களோ
முக்காலமும் உணர்ந்தவர்களாதலின் அரசன் தெரிவித்துக்கொள்ள விரும்புவதை
உணர்ந்தவர்களாய் அரசன் மனக் கருத்தைத் தாமே அவனிடங் கூறுவாராய் அதனை
வருஞ் செய்யுளால் அரசனுக்குக் கூறுகின்றனர் என்க. கடவுள் என்றது ஈண்டுக் கடவுள்
போன்ற தன்மையுடையவனாகிய முனிவனை உணர்த்தி நின்றது.

( 78 )