பக்கம் : 161
 

      (இ - ள்.) மன்னவன் மடமகள் - சுவலனசடியரசனுடைய இளமைமிக்க மகளாகிய
சுயம்பிரபை, அவர் இன்உரை அமுதம் உண்டு - அந்த முனிவருடைய இனியமொழியாகிய
அமுதத்தையுட்கொண்டு, எழுந்த சோதியள் - உள்ளத்திலெழுந்த நல்லறிவுக் காட்சியை
யுடையவளாய், வணங்கி - சமணமுனிவரைப் போற்றி, பன்னி - அவர் கூறிய நோன்புகளை
ஆராய்ந்து, ஓர் நோன்பு மேல்கொண்டு - அவற்றில் ஒரு நோன்பைச் சிறந்த தாக எண்ணி,
பின்அது பாங்கினால் முடிப்பது ஓர்பெருமை எண்ணினாள் - பின் அந்நோன்பைத் தான்
முறைப்படி நிறைவேற்றுவதாகிய ஒரு பெருஞ் செயலை உள்ளத்தில் கொண்டாள். (எ - று.)
மற்று - அசை.

சமண முனிவர்களின் அறவுரையைக் கேட்டுக்கொண்டிருந்த அரசன் மகள் சுயம்பிரபை,
தனது தகுதிக்கேற்ப ஒரு நோன்பை மேற்கொள்ளுதற்கு உள்ளத்தில் முடிவு செய்தனள்
என்பதாம். நோன்பின் பெயர் முதலியன பின்னர் விளங்கும்.

( 87 )

அரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து
செல்லுதல்

206. முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன்
பனிமலர் விரவிய படலை மார்பினான்
கனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர்
இனிதினின் வலமுறை யெய்தி யேகினான்.
 

     (இ - ள்.) தேன்மூசு - வண்டுகள் மொய்க்கப்பெற்ற, பனிமலர் விரவிய படலை மார்
பினான் - குளிர்ந்த பலவகை மலர்களைக் கொண்டுகலந்து தொடுக்கப்பெற்ற
தளிர்மாலையை அணிந்த மார்பையுடையவனாகிய சுவலனசடியரசன், முனிவரர் திருந்து
அடிவணங்கி - அம்முனிவர்களுடைய அழகிய திருவடிகளைப் போற்றி,
கனிவளர்பொழிலிடைக் கடவுள் நல்நகர் - பழங்கள் நிறைந்த சோலையிலுள்ள அருகக்
கடவுளினது சிறந்த திருக் கோயிலை, இனிதினின் வலம் முறைஎய்தி - மகிழ்ச்சியோடு
முறைமையாக வலஞ்செய்து, ஏகினான் - அவ்விடத்தைவிட்டுச் செல்லலானான் (எ - று.)

அருகக்கடவுளை வணங்கியபின், எதிர்பாராது வந்து தோன்றிய சமண முனிவர்களிடம்
அருளுரையும் பெற்றுக்கொண்ட அரசன், முனிவர்களை வணங்கி அவர்களுடைய
உடன்பாடு பெற்றுக்கொண்டு திருக்கோயிலையும் வலஞ்செய்து அவ்விடத்தை விட்டு
அப்பாற் செல்லுகின்றான்.

( 88 )