(இ - ள்.) மன்னவன் மடமகள் - சுவலனசடியரசனுடைய இளமைமிக்க மகளாகிய சுயம்பிரபை, அவர் இன்உரை அமுதம் உண்டு - அந்த முனிவருடைய இனியமொழியாகிய அமுதத்தையுட்கொண்டு, எழுந்த சோதியள் - உள்ளத்திலெழுந்த நல்லறிவுக் காட்சியை யுடையவளாய், வணங்கி - சமணமுனிவரைப் போற்றி, பன்னி - அவர் கூறிய நோன்புகளை ஆராய்ந்து, ஓர் நோன்பு மேல்கொண்டு - அவற்றில் ஒரு நோன்பைச் சிறந்த தாக எண்ணி, பின்அது பாங்கினால் முடிப்பது ஓர்பெருமை எண்ணினாள் - பின் அந்நோன்பைத் தான் முறைப்படி நிறைவேற்றுவதாகிய ஒரு பெருஞ் செயலை உள்ளத்தில் கொண்டாள். (எ - று.) மற்று - அசை. சமண முனிவர்களின் அறவுரையைக் கேட்டுக்கொண்டிருந்த அரசன் மகள் சுயம்பிரபை, தனது தகுதிக்கேற்ப ஒரு நோன்பை மேற்கொள்ளுதற்கு உள்ளத்தில் முடிவு செய்தனள் என்பதாம். நோன்பின் பெயர் முதலியன பின்னர் விளங்கும். |
(இ - ள்.) தேன்மூசு - வண்டுகள் மொய்க்கப்பெற்ற, பனிமலர் விரவிய படலை மார் பினான் - குளிர்ந்த பலவகை மலர்களைக் கொண்டுகலந்து தொடுக்கப்பெற்ற தளிர்மாலையை அணிந்த மார்பையுடையவனாகிய சுவலனசடியரசன், முனிவரர் திருந்து அடிவணங்கி - அம்முனிவர்களுடைய அழகிய திருவடிகளைப் போற்றி, கனிவளர்பொழிலிடைக் கடவுள் நல்நகர் - பழங்கள் நிறைந்த சோலையிலுள்ள அருகக் கடவுளினது சிறந்த திருக் கோயிலை, இனிதினின் வலம் முறைஎய்தி - மகிழ்ச்சியோடு முறைமையாக வலஞ்செய்து, ஏகினான் - அவ்விடத்தைவிட்டுச் செல்லலானான் (எ - று.) அருகக்கடவுளை வணங்கியபின், எதிர்பாராது வந்து தோன்றிய சமண முனிவர்களிடம் அருளுரையும் பெற்றுக்கொண்ட அரசன், முனிவர்களை வணங்கி அவர்களுடைய உடன்பாடு பெற்றுக்கொண்டு திருக்கோயிலையும் வலஞ்செய்து அவ்விடத்தை விட்டு அப்பாற் செல்லுகின்றான். |