(இ - ள்.) அரைசன் - சுவலனசடியரசன், அரைசரோடு - தன்னைச் சார்ந்த அரசர்களுடனே, அகநகர் சென்றபின் - தனது நகரத்தினுள்ளே சென்ற பின்பு, சகத்அபி நந்தனர் என்னும் சாரணர் - சகந்நந்தநன் அபிநந்தநன் என்னும் பெயர்கொண்ட அம்முனிவர்களிருவரும், மிகநவின்று இறைவனை வணங்கி - மிகுதியான வாழ்த்துரைகளைக் கூறி அருகக் கடவுளை வணங்கி, விண்ணிடை - விசும்பிலே, பகல்நகு சுடர்ஒளிபடர - கதிரவனை இகழ்கின்ற தம்மேனியின் பேரொளி எங்கும் பரவ, ஏகினார் - சென்றார்கள். (எ - று.) பொழிலைவிட்டுப் புறப்பட்ட அரசன், தன்னை எதிர்கொண்ட அரசர் களோடு நகரத்திற்குட் சென்றான். முனிவர்கள் அருகக்கடவுளைப் போற்றி விசும்பாறாத் தமக்கு விருப்பமான இடத்திற்குச் சென்றனர் என்க. நகர் அகம் என்பது அகநகர் எனச் சொல்நிலை மாறிற்று. முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. இலக்கணப் போலியெனினுமாம். முனிவர்கள் விண்ணிற் சென்றபோது அவர்களுடைய உடலொளி எங்கும் பரவுமாறு சென்றார்கள், |
(இ - ள்.) அழல்கொடி எறித்தொறும் - தீச்சுடர் வீசியெறிக்குந்தோறும், சுடரும் - ஒளிமிகுகின்ற, நிழல்ஆடகம் கொடி அதுஎன - ஒளியுள்ள நீண்ட பொன் கம்பியைப்போல, நிறைந்த காரிகைக்குழல்கொடி அனையவள் - நிறைந்த அழகையும் கூந்தலையும் உடையவளும், கொடியைப் போன்றவளுமாகிய சுயம்பிரபை, கொண்ட நோன்பினால் - தான்மேற் கொண்ட நோன்புச் செயலால், எழிற்கொடி - அழகுக்கொடியானது, சுடர்வது - விளங்குகின்றாற் போன்ற, ஓர்இயற்கை எய்தினாள் - ஒப்பற்ற இயற்கை யழகை யடைந்தாள் (எ - று.) நெருப்பிலிட்டுப் புடம்வைத்துச் சுடச்சுடப் பொன்மாசு நீங்கி ஒளி மிகுவதைப்போல, சுயம்பிரபை தான் மேற்கொண்ட நோன்பைக் கடைப் பிடித்தலாகும் துன்பம் வருத்த வருத்தத் தீவினை நீங்குதலால், மனக்கலக்க மின்றி அறிவொளி பெற்றுத் தெளிய உடலொளி மிகுந்தவளாகி விளக்க முற்றனளென்பதாம். “சுடர்ச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பம், சுடச்சுட நோற்கிற் பவர்க்கு“ என்னுந் திருக்குறள் ஈண்டு எண்ணத்தக்கது. |