(இ - ள்.) தகைத்தவார் குழலவள் - கட்டுற்ற நெடியகூந்தலையுடைய வளான சுயம்பிரபையினது, தன்மை - இயல்பு, முகைத்தவார் முல்லையை முருக்கும் மெல்இயல் ஆயினும் - அரும்பிய நீண்ட முல்லைக்கொடியை மென்மையிற் கெடுக்கக்கூடியவாறு அமைந்த மெல்லியல்பேயாயினும், நோன்பு - சுயம்பிரபை மேற்கொள்ள வெண்ணிய அவ்வரிய நோன்புகள், வகுத்த ஆறு உயர்ந்தன - அவள் முடிவுசெய்துகொண்டபடி சிறப்பாக நடந்தேறின, மாசுஇலா அகத்து - குற்றமற்ற உள்ளத்தின்கண், மாண்பு உடையவர்க்கு - மனத்திட்பமாகிய பெருமையை உடையவர்களுக்கு, அரியது இல்லை - அருமையானது இவ்வுலகில் யாதொன்றும் இல்லை, (எ - று.) சுயம்பிரபையானவள், முல்லைக்கொடியையும், வெல்லுமாறு மென்மை மிக்கவளாயினும், தான் மேற்கொண்ட நோன்பிற்குரிய ஒழுக்கங்களை யெல்லாம் தன் எண்ணத்தின்படி குறைவற நன்றாகச் செய்து முடித்தாள். அவள் அவ்வாறு செய்து முடித்ததற்கு அவளுடைய மனத்திட்பமே காரணம் என்க. முல்லைக்கொடியை மகளிர்க்கு உவமையாகக் கூறுதலை வேறு நூல்களிலும் காணலாம். அகைத்தல் - தாழ்தல். மாண்பு - செயற்கரியன செய்து முடிக்குங் கடைப்பிடி. “பெருமையுடையவ ராற்றுவா ராற்றின், அருமையுடைய செயல்“ என்பது திருக்குறள். |