மிக்கு விளங்குதலை இச்செய்யுளில் கூறினார். ஒருபாலெலாம் என்றது குறிஞ்சி நிலத்தை. குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் முருகன் என்பது “சேயோன் மேய மைவரை யுலகமும்“ என்பதனாற் பெறப்படும். இல்முன் என்பது முன்றில் என இலக்கணப்போலியாக மாறிநின்றது. இதன் பொருள் வீட்டின் முன்னிடம் என்பது. வீடுகளின் முன்னரோ கோயில்களின் முன்னரோ வெறியாட்டு நிகழ்கின்றதென்று கொள்க. அதிரும்மொரு - மகரமெய் விரித்தல். |
( 7 ) |
முல்லை நிலம் |
14. | ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர் கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல் காறு கொண்டவர் கம்பலை யென்றிவை மாறு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.1 |
(இ - ள்.) ஏறு கொண்டு - பணையம் வைத்துவிட்ட கொல்லேற் றினைத் தழுவிக்கொண்ட வென்றி குறித்து; எறியும்பணை - அடிக்கின்ற ஏறங்கோட்பறையையுடைய; கோவலர் - இடையர்கள்; கூறுகொண்டு எழு - இசைகளின் வகைகளைக் கொண்டு எழுகின்ற; கொன்றை அம் தீம் குழல் - கொன்றைப் பழத்தாலாகிய அழகிய இனிய இசையையுடைய குழலென்னும் ஊதுகருவியின் இசையும்; காறு கொண்டவர் கம்பலை - ஏர் உழுகின்ற ஆயர்கள் ஆரவாரமும்; என்றஇவை - என்கிற இவைகள்; ஒர் மாடு எலாம் - ஒரு பக்கமாகிய முல்லைநிலத்தின் எவ்விடத்தும்; மாறுகொண்டு சிலம்பும் - ஒன்றின் ஒன்று மாறுபடுதலைக் கொண்டு மிகுந்தொலிக்கும். (எ - று.) காறு - கொழு - அஃது ஏருக்கு ஆகுபெயராய் நின்றது. ஆயருள் ளும் உழுதுண்போர் உளராகலின், இங்ஙனம் கூறினர். ஏறுகொண்டெறியும் பணை - ஏறுகோட்பறை. கோவலர், கோக்களை (ஆக்களை)ப் பாதுகாத்தலில் வல்லமையுடைமை பற்றிவந்த காரணப்பெயர் என்பர். கொன்றையந் தீங்குழல், கொன்றைப்பழத்தைக் குடைந்துசெய்த இசைக்கருவி. “கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி“ என்பது சிலப் பதிகாரம். “கொன்றைப்பழக் குழற் கோவலர்“ என்பது வளையாபதி. ‘கம்பலை‘ ஒலியை உணர்த்தும் உரிச்சொல்; “கம்பலை சும்மை கலியே யழுங்கல்; என்றிவை நான்கும் அரவப் பொருள“ என்பது தொல்காப்பியம். |
( 8 ) |
|
(பாட்டு) 1. சிலம்புமொர் பாலெலாம். |