(இ - ள்.) கரு - கரிய, வடி - கூரிய, நெடு - நெடிய, நல்வேல் - நல்ல வேற்படையைப் போன்ற, கண்ணி - கண்களையுடையவளான சுயம்பிரபை, இன்னணம் - இவ்வாறு, வெருவு உடை வினைப்பகை விலக்கும் வீறுசால் - உயிர்கள் அஞ்சப்படுதலை யுடைய கருமங்களாகிய பகைகளை நீக்கவல்ல பெருமை மிகுந்த, மருவு உடைமொழிகளால் - விரும்பப்படுந் தன்மையுள்ள சொற்களால், பரவி - அருகக்கடவுளை வழிபட்டு, வாமன திருஅடிச் சேடமும் - அருகக்கடவுளினுடைய திருவடிகளில் தூவிய மலராகிய சேடத்தையும் திகழச் சூடினாள் - விளங்குமாறு அணிந்துகொண்டாள். (எ - று.) கருவடி - கரியமாவடுவுமாம்; ‘வடுப்பிள வனைய கண்ணாள்‘ என்பது சீவகசிந்தாமணி. சுயம்பிரபை அருகக்கடவுளை வழிபட்ட பிறகு அக்கடவுளின் அடிகளில் அருச்சித்த மலர்களைத் தன்னுடைய முடியிலே சூடிக்கொண்டாள். வாமன - திருவடி, அ, ஆறாம் வேற்றமைப் பன்மையுருபு, வாமனுடைய திருவடிகள், என்பது பொருள். |
(இ - ள்.) வான்உயர் கடவுளை - மிகச் சிறந்த தெய்வமான அருகக்கடவுளினது, வயங்கு சேஅடி - விளங்குகிற சிவந்த திருவடிகளில் சாத்திய, தேன்உயர் திருமலர் - தேன் மிக்க சிறந்தமலர்களாகிய, சேடம் கொண்டபின் - வழிப்பாட்டுப் பொருளைப் பெற்றுக்கொண்ட பிறகு, மங்கை - சுயம்பிரபை, மான்உயர் நோக்கியர் பரவ - மான்பார்வைபோலச் சிறந்தகண் பார்வையை உடையவர்களான தோழியர் வழிபாடு செய்ய, தன்கோன் - தன் தந்தையினுடைய, உயர்வளம்நகர்க் கோயில் முன்னினாள் - சிறந்த வளப்பமுள்ள நகரத்தின் கண்ணேயிருக்கின்ற அரண்மனையை அடைந்தாள். (எ - று.) நோன்பு முதலியவற்றை முடித்துக்கொண்ட சுயம்பிரபை தன்னுடைய தந்தையின் இருப்பிடத்தை அடைந்தனள். கடவுளை என்னுமிடத்தில் உருபு மயங்கிவந்தது. வானுயர் - ஒருபொருட் பன்மொழி; வானுலகத்திலே உயர்ந்து விளங்குகின்ற கடவுள் எனினுமாம். |