பக்கம் : 180
 

பொன்னணியில் சேர்த்துப் பதிக்கப்படவேண்டிய ஒப்பற்ற மணிகள், ஈயத்திற்
பதிப்பிக்கப்பட்டாலும் மறுக்காமல் அங்கும் பொருந்தி விளங்கும்; அதைப்போன்று
மேன்மைகள் யாவும் சிறந்து அமையப்பெறாத மணாளர்கட்கு மணஞ்செய்து கொடுப்பினும்
மங்கையர் மறுக்காமல் உடன்பட்டே யிருப்பர் என்பதாம். இவ்வாறு முற்றிலும்
தாய்தந்தையர் எண்ணப்படி உடன்பட்டு நடக்கும் மங்கையர்கட்குத், தக்க கணவர்களைத்
தேர்ந்தெடுக்குங்கடமை பெற்றோர்க்கு ஏற்பட்டிருப்பது குறித்து எண்ணமிடு கிறான் அரசன்.
கலக்கு - கலத்துக்கு - அத்துச்சாரியை தொக்கது. குரவர் - பெரியோர்.

( 112 )

தாய்தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்

231. அந்தைதா முறுவது கருதி யாருயிர்த்
1தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார்
2சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே
நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ.
 

     (இ - ள்.) தாம் அந்தை உறுவது கருதி - தாம் நன்மையடைவதை யெண்ணி, ஆர்
உயிர்த் தந்தை தாய் என்ற இவர் - அருமையான உயிர்போன்ற தந்தையும் தாயும் என்ற
இவர்கள், கொடுப்பின் - மணஞ்செய்து கொடுத்தால், தையலார் - பெண்கள், சிந்தை தாய்
இலாதவர் திறத்தும் - தமது உள்ளஞ்சேரப் பெறாதவரிடத்தும், செவ்வனே - நன்றாக
நடந்து கொள்வார் களேயல்லாமல், தாம்நொந்து - தாங்கள் மனம்வருந்தி, பிறிது உரை
நொடிய வல்லரோ - மாறான மொழியைச் சொல்ல வல்லவர்களாவார்களோ?
ஆகமாட்டார்கள். (எ - று.)

வறியரான தாய்தந்தையர் தாம் நன்மை அடைவது ஒன்றை மட்டும் எண்ணி,
மங்கையர்க்குப் பொருத்தமில்லாதவருக்கு மணஞ் செய்து கொடுத்துத் தீமையைச்
செய்துவிட்டாலும்கூட, மங்கையர் மனம் வருந்தி அந்தத் தாய் தந்தையர்மீது
குற்றஞ்சொல்லமாட்டார்கள் என்பது அரசன் முடிவு. அந்தை - அந்தம் என்பதன் விகாரம்.
தாயிலாதவர் - தாவியிலாதவர்; தாய்: இறந்தகால வினையெச்சம். மனத்திற்குப்
பிடிக்காதவர்களிடத்திலும் என்பது கருத்து.


 (பாடம்) 1 தந்தையேன் றிவர்க்கெனக் கொடுப்பிற் றையலார். 2 சிந்தைதாமிலாதவர்.