பக்கம் : 181
 

காமமுங் காதலும்

232.

காதலா 1லறிவது காமங் காதலே
யேதிலா ருணர்வினா 2லெண்ண லாவதன்
றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ
லோதினா ருரைவழி யொட்டற் பாலதே.
 

     (இ - ள்.) காமம் - சிற்றின்ப நோக்கமானது, காதலால் அறிவது - காதலைக்கொண்டு
ஒருவாறு உணரப்பெறும், காதல் - சிற்றின்பவுணர்வு, ஏதிலார் உணர்வினால் எண்ணல்
ஆவது அன்று - மற்றையோருடைய உணர்ச்சியினால் அளந்தறியக்கூடியது அன்று,
ஆதலான் - ஆகையினாலே, மாதராள் திறத்தில் - சுயம்பிரபையின் செயலில், ஆணைநூல்
- அறநூலை, ஓதினார் உரைவழி - படித்தறிந்தவர்களது சொல்லின் வழியே, ஒட்டற்பாலது
- பொருந்த நடக்குதல் வேண்டும். (எ - று.)

காதலைக்கொண்டு காமத்தை அளவுபடுத்துதல் வேண்டும்; காத னுண்மையையும்
இன்மையையும் மற்றையோர் அறியார். சுயம்பிரபை திறத்தில் நாமாகச் செய்யக்கூடியது
ஒன்றுமில்லை. அமைச்சர்களைக் கூட்டிக் கலந்தெண்ணியே ஒரு முடிவுக்கு வருதல்
வேண்டும் என்று அரசன் ஒரு முடிவிற்கு வருகிறான். ஏதிலார் - அயலார்; ஏதும்
தொடர்பில்லாதவர் என்க.

( 114 )

அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்

233. தன்னுணர் 3பொறிபிறர் தங்கண் கூட்டென
வின்னண மிருவகைத் திறைவர் 4வாழ்க்கையே
தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி
தின்னண மியற்றுகென் றமைச்ச ரேவுவார்.
 

     (இ - ள்.) இறைவர் வாழ்க்கை - அரசர்களுடைய வாழ்கையானது, தன் உணர்பொறி
- தம்முள்ளுணர்வாகிய ஊழான் ஆவது, பிறர் தங்கள் கூட்டுஎன - ஏனையோர்
கூட்டுறவாலாவது என்று, இன்னணம் இருவகைத்து - இவ்வாறு இரண்டு வகைப்படும்,
தன்னுணர் பொறிப்புலம் தன்னின் ஆம் - தன்னுணர்வு கொண்டு எண்ணிச் செய்யும்
செயல் தன்னாலேயே உண்டாம், பிறிது - மற்றொன்றோ, இன்னணம் இயற்றுக என்று -
இவ்வாறு செய்க என்று, அமைச்சர் ஏவுவார் - அமைச்ச ரானோர் சொல்லிச் செய்யுமாறு
செலுத்துவார்கள், (எ - று.)


    (பாடம்) 1. ஆவது. 2. எண்ணலாவதன்று.
3. பொறிப்புலம் பிறர்கண் கூட்டென. 4. வாட்கைதான்.