பக்கம் : 189
 

அறிஞர்களாற் கூறப்பெற்ற, நுண்ணிய நூலின் அன்றி - நுட்பமான பொருளையுடைய அற
நூல்களால் அல்லாமல், நுழைபொருள் உணர்தல் தேற்றார் - தாம் மேற்கொள்ளவேண்டிய
செயல்களை நன்குணர மாட்டார்கள், எண்ணிய - உள்ளத்தின்கண் நினைத்த செயல்களை,
துணிந்து செய்யும் சூழ்ச்சியும் இல்லை - உறுதியாக நிலைபெறச் செய்யும் அறிவுத்திறமும்
அவர்கட்கு உண்டாக மாட்டாது (எ - று.) அன்றே : அசை.

அரசர்கள் எத்தகையோரையும் வணங்கார். அவர்களை வணங்கச் செய்தலும் அரிது.
ஆயினும் அவர்கள் அறிஞராற் செய்யப்பட்ட அற நூல்களைப் படித்தறிந்தாலல்லாமல்
செய்யவேண்டிய செயல்களையும் விலக்கவேண்டிய செயல்களையும் அறியமாட்டார்கள்.

( 4 )

அமைச்சர் மாண்பு

243. வால்வளை 1பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்
மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்
நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர்.
 

     (இ - ள்.) நுணங்குபோது அணங்குதாரீர் - நுண்ணிய மலர்களமைந்த
அழகியமாலையையணிந்த அமைச்சர்காள்!, வால்வளை பரவிமேயும் - வெள்ளிய
சங்குகளானவை எங்கும் பரந்து மேயப்பெறுகிற, வளர்திரை வளாகம் எல்லாம் - மிகுந்த
அலைகள் உண்டாகப் பெறுகிற கடல் சூழ்ந்த உலகத்தை எல்லாம்; கோல்வளைவு உறாமல்
காக்கும் - செங்கோலானது வளையாமல் அரசாட்சி செய்கின்ற, கொற்றவன் நெடியனேனும்
- அரசனானவன் தன்னளவிலே பெருமையால் உயர்ந்தோனாயினும், மேல்விளை பழியும்
வெய்ய வினைகளும் விலக்கி நின்றார் - மேலே உண்டாகத்தக்க இழிசெயல்களையும்
கொடிய செயல்களையும் தானே தடுத்துக்கொள்ளும் ஆற்றலுடையானாகான் அவற்றைத்
தடுத்து நிற்போர், நூல்விளை புலவர் அன்றே - அறநூல் நெறிகளையெல்லாம்
அமைக்கின்ற அறிஞர்களல்லரோ ? (எ - று.)


(பாடம்) 1. மறலி.