பக்கம் : 192
 

செய்யும் இயல்புடையவனாவான், அமைச்சர் ஆவார் - இனி அமைச்சர்களாகத் தக்கார்
யாவரென்னின், செறிந்தவர் தெளிந்த நூலார் - நற்குண நற்செயல்கள் செறிந்துள்ள வரும்
பன்னூல்களையும் நன்குணர்ந் தவர்களும், சிறந்தவை - நன்மை பயக்கக்கூடியவைகளை,
தெரிந்து கூறி - ஆராய்ந்து அரசனுக்குச் சொல்லி; அறிந்தவை - தாங்கள் நன்மை
யென்றுணர்ந்தவைகளை, இயற்றுகிற்கும் - தவறாமற் செய்விக்கும், அமைதியார் -
தன்மையை யுடையவர்களாவர் (எ - று.)
இதனால் அரசர் இயல்பும் அமைச்சர் இயல்பும் இயம்பப்பட்டன.

( 9 )

தோள்வலியும் சூழ்ச்சியும்

248. வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்
தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும்
ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்
கோள்வலிச் சீய 1மொப்பீர் சூழ்ச்சியே 2குணம தென்றான்.
 

     (இ - ள்.) வாள்வலித் தடக்கை மன்னர் - வாட்படையின் ஆற்றலையும் பெரிய
கையையுமுடைய அரசர்கள், வையகம் வணக்கும் வாயில் - உலகத்தைத் தம்மடிப்படுத்தும்
வழி, தோள்வலி சூழ்ச்சி என்று இருவகைத் தொகையிற்று ஆகும் - தோளாற்றலும்
அமைச்சர்களுடன் செய்யும் சூழ்ச்சித் திறனும் என்று இருவகையாக அளவுபடுத்திச்
சொல்லப்பெறுவதாகும். ஆள்வலித் தானையார்கட்கு - போர் மறவர்களின் ஆற்றலில்மிக்க
படையையுடைய அரசர்கட்கு, ஆதியது அழகிதேனும் - முதலாவதாகக் கூறப்பெற்ற தோள்
ஆற்றல் சிறப்புடையதென்றாலும், கோள்வலிச் சீயம் ஒப்பீர்! - கொலை செய்யும் ஆற்றல்
பொருந்திய அரிமாவைப் போன்றவர்களே!, சூழ்ச்சியே - குணம் என்றான் -
அமைச்சர்களுடன் கலந்தெண்ணும் ஆராய்ச்சித் திறனே நல்லதன்மையோடு
கூடியதென்றான் (எ - று.) அது : பகுதிப்பொருள் விகுதி.

தோளாற்றல் அமைச்சர்களைக் கலந்தெண்ணுதல் என்னும் இரண்டனுள் அமைச்சர்களைக்
கலந்து எண்ணுதலே உயர்ந்தது என்கிறான்.


(பாடம்) 1. மெய்பின். 2. குணமெ தென்றான்.