பக்கம் : 198
 

- நமது வழிமுறையானது விளங்குமாறு பிறந்துள்ள, நங்கைதன் நலத்திற்கு ஒத்தான் -
சுயம்பிரபையினுடைய அழகிற்குத் தகுந்தவனாக, தங்குடி விளங்கநின்ற தன்மையான் -
தனது குடியானது சிறப்படையுமாறு பிறந்திருக்கும் பெருமையை யுடையவன், எவன்கொல்
என்றான் - யாவனோ என்று கேட்டான். (எ - று.)

சுயம்பிரபை மிகுந்த சிறப்புடையாள் என்பதை அரசன் முன்னீரண்டடி களால்
பெறவைத்தான். கொங்கு-தேன்; ஈண்டு தேனிறாலுக்கு ஆகுபெயர். தனது குடியை விளக்கப்
பிறந்தவள் என்பான் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட்டாங்கு என்று உவமை
எடுத்தோதினான். குலப்பெருமை குறிப்பான் வயிரக்குன்றின் உவமை கூறினான்.

அமைச்சர்கள் பதிலுரைத்தல்

256. இறையிவை மொழியக் கேட்டே 1யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி
யறைகழ லரவத்தானை யணிமுடி யரச ரேறே
நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று
முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார்,
 

     (இ - ள்.) இறையிவை மொழியக் கேட்டே - அரசனானவன் மேற்கூறியவாறு
சொல்லியதைக் கேட்டு; இருந்தவர் - அமைச்சர்கள், இறைஞ்சி ஏத்தி - அரசனைத்
தொழுது போற்றி, அறைகழல் அரவத்தானை - ஒலிக்கின்ற வீரக்கழலைக் கட்டிய போர்
மறவர்களைக்கொண்ட பேரொலி பொருந்திய படையையும், அணிமுடி - அழகிய
முடியையும் உடைய, அரசர் ஏறே - அரசர்கட்குச் சிங்கவேறு போன்றவனே! நிறைபுகழ்
உலகம் காத்து - நிறைந்த புகழையுடைய இவ்வுலகத்தைப் பாதுகாத்து; நின் இறைமை நிலாக
என்று - உன்னுடைய அரசுரிமையானது நீடுழி வாழ்வதாக என்று வாழ்த்துரை கூறி, முறை
முறை மொழியலுற்று - வரன்முறையாகப் பதிலுரைத்தற்கு, முன்னிய முகத்தர் ஆனார் -
முற்பட்ட முகமடையவர்களானார்கள் (எ - று.)


(பாடம்) 1. இருந்தவனிறைஞ்சி.