பக்கம் : 204
 

அமைந்துள்ள, செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் செம்மையான வேற்படையை
ஏந்திய அரசனானவன் கொடியவனானால், அறம் - நன்னிலையானது; தலைமயங்கி -
சுழற்சியையடைந்து, வையம் - உலகத்துயிர்கள், அரும்படர் உழக்கும் - பொறுத்தற்கரிய
துன்பத்தை யடையும் (எ - று.) அன்றே : அசை.

கடல் வெதும்பியவிடத்து அதனில் வாழ் உயிர்த் தொகைகள் யாவும் துன்பத்தை
யடைதலைப்போல், அரசன் தீயவனாயின் உலகத்துயிர்கள் யாவும் கொடிய
துன்பத்தையடையும் என்க.

( 24 )

இதுவுமது

264. மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்
விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்
கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும்
தண்குளிர் கொள்ளு மேனுந் தாமிக வெதும்பு மன்றே.
 

     (இ - ள்.) அரசர் தங்கள் - அரசர்களுடைய, விண்குளிர்கொள்ள ஓங்கும்
வெண்குடை - விண்ணுலகமும் இன்பத்தை யடைதற்குக் காரணமாகச் சிறந்து விளங்குகின்ற
வெண்கொற்றக் குடையானது, மண் குளிர் கொள்ளக் காக்கும் மரபு ஒழிந்து - நிலவுலகம்
இன்பத்தையடையுமாறு புரக்கும் வரன்முறையினின்று நீங்கி, வெதும்பும் ஆயின் -
உயிர்களை வருத்தத் தொடங்குமானால், கண் குளிர் கொள்ளப் பூக்கும் - கண்ணானது
மகிழ்ச்சியை அடையுமாறு மலரும், கடிகயத் தடமும் - மணம்பொருந்திய பெரிய
தடாகங்களும், காவும் - பூஞ்சோலைகளும், தண் குளிர் கொள்ளுமேனும் - மிகுந்த
குளிர்ச்சியைக் கொண்டிருந்தனவாயினும், தாம் - அவைகளும், மிக வெதும்பும் - மிகக்
கொதிப்பைக் கொண்டன வேயாம்
(எ - று.) அன்றே : அசைநிலை.

அரசன் எவ்வழி குடிகள் என்பவாகலின், எல்லாப் பொருள்களும் அரசனைப்போல்
விளங்கும் என்க. விண்குளிர் கொள்ளலாவது, செங்கோல் மன்னன் நாட்டில் நிகழும் விழா,
வழி பாடு வெள்வி முதலியவற்றால் தேவர்கள் மகிழ்தல், விண் தேவர்கட்கு ஆகுபெயராய்
நின்றது.

( 25 )