பக்கம் : 207
 

அரசியல் நன்றாக அமையாத பொழுது மனிதன் இப்பிறப்பிலேயே துன்புற நேர்தலின்
“ஒருமையாலே துன்பம் எய்தும் ஒருவன்“ என்றார். செல்வநுகர்ச்சி ஆகூழாற் றோன்றுவ
வாகலின் “உம்மையாலே திருமையான் முயங்கும் செல்வச்செருக்கு“ என்றார். செருக்கு -
ஈண்டுச் செல்வ நுகர்ச்சியாலாய களிப்பு. ஆகூழ்போன்று அரசன் தன் குடிகட்கு இன்ப
நல்க வல்லன் என்றபடி. நோக்கம் - ஈண்டு அவருடைமை மேற்று. “நீ உவந்து நோக்கிய
வழி பொன்பூப்ப“ என்றார் பிறரும். இருமையும் ஒருமையாலே இயற்றலாவது, இம்மையின்
நன்னெறியில் நிறுத்தி, பயம் தீர்த்து இன்புறச் செய்தலும், மறுமையில் துறக்கம்
புகுவித்தலுமாகிய இரண்டும் ஒவ்வொரு பிறப்பானே பொருந்த அரசியற்றல், தெய்வம்
கட்புலனாகாமையின் கண்ணெதிர் தோன்றும் அரசன், அத்தெய்வத்தின் மிக்க
பெருமையுடையவன் என்க.

( 28 )

உலகத்திற்குக் கண்கள் மூன்று

268. கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் 1பேரார்
எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்
மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை 2மன்னா.
 

     (இ - ள்.) மன்னா - அரசனே! கண்எனப்படுவ மூன்று - உலகத் திற்குக் கண்கள்
என்று சொல்லப்பெறுவன மூன்றாம் அவையாவன:- காவலன் - உயிர்களைப் பாதுகாத்தற்
றொழில் வல்லவனான அரசன், கல்வி - கல்வியறிவுடைமை, காமர் விண்ணினைச் சுழல
ஒடும் வெய்யவன் - அழகிய விசும்பின் கண் சுழன்று ஓடுகிற கதிரோன், என்னும் பேரார்
எண்ணினுள் - என்று சொல்லப்பெறுகிற பெருமைபொருந்திய இம்மூன்று மாம், மூன்றுள் -
இவற்றுள், தலைக்கண் வைத்தகண் அஃது இல்லையாயின் - முதலாவதாக நிறுத்தப்பட்ட
நல்லரசாகிய கண் இல்லையானால், மண்ணினுக்கு - இவ்வுலகத்திற்கு, இருளை நீக்கும்
வகை பிறிது இல்லை - துன்பவிருளைப் போக்கும் வழி வேறொன்றும் இல்லை (எ - று.)

காவலன் துன்ப விருளையும், கல்வி அறியாமையாகிய அகவிருளையும், வெய்யவன்
புறவிருளையும் போக்கி காட்டற்குரிய கண்களாம், எவ்வாற்றானும் துன்ப விருள்
தொலைதலே உயிர்கட்குச் சிறப்பாகலின் அவ்விருளை அகற்றும் அரசாகிய கண்
தலைக்கண் வைக்கப் பட்டது என்க.

( 29 )


(பாடம்) 1. பேர - பேரர். 2. மன்னோ.