செய்யப்பெறவேண்டிய இவைகளிரண்டும், தத்தம் செய்கையில் திரியுமாயில் - தத்தமக்குரிய செயன்முறையில் மாறுபடுமானால், பெருந்துயர் விளைக்கும் - மிகுந்த துன்பத்தினை யுண்டாக்குவனவாம். (எ - று.) அன்றே, அசை. அருந்தவம் புரிதலும் அரசாட்சி செய்தலும் செயற்கருஞ் செயல்களாம். ‘இவைகளைப் புரிவார் வருத்தத்தினைப் பொருட்படுத்தாது உள்ளத்தினைத் தம் வழிப்படுத்துதல் வேண்டும். உள்ளம் அடக்கப் பெறாமல் அதன் வழியில்தானே செல்லுமாயில் பெருந்துன்பத்தினை உண்டாக்கும் என்க. “கோளு மைம்பொறி யுங்குறை யப்பொருள் நாளுங் கண்டு நடுக்குறு நோன்மையின் ஆளு மவ்வர சேயர சன்னது வாளின் மேல்வரு மாதவ மன்னனே. என்றார் கம்பநாடரும் (மந்தரைச்சூழ்ச் - 14) |
(இ - ள்.) அந்தரம் திரியுஞ் செய்கை - விண்ணிலே இயங்குதலைச் செய்யும் செயலினையுடைய, அமரர்தம் அரசு வேண்டி - தேவருலக அரசாட்சி விரும்பி, இந்திரவுலகங் காணும் நெறியவை யாவை என்னின் - இந்திரவுலகத்தையடையும் வழிகள் எவைகளோவெனின், மந்திரம்வழாத - மந்திரநெறிகளிலே தவறாத, வாய்மை மாதவம் முயறல் - மெய்ம்மையான சிறந்த தவத்தை முயன்றுசெய்தல், அன்றேல் - இல்லாவிடின், தந்திரம் தழுவி - சூழ்ச்சிமுறையைப் பொருந்தி, செங்கோல் - நெறிதவறாத ஆட்சிமுறையை, தளர்விலன் தரித்தல் என்றான் - தளர்ச்சியடையாதவனாக மேற்கொள்ளுதல் என்று கூறினான். (எ - று.) |