பக்கம் : 213
 

பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு, கரும்பஞ்சுக் குழம்புமாம். மஞ்சி - முகில். மஞ்சி நிற்ப என்க.

அத்தகைய தன்மையாவது - விதையில் ஊட்டப்பட்ட நிறம் மலரிடைத் தோன்றுவது
போன்று, சூழ்ச்சியில் அமைக்கப்பட்ட கருத்தே செயலில் பயனாய் விளையும் தன்மை.
மாதுளம் வித்தில், செவ்வரக்குப் பூசிப்புதைத்தால் செந்நிற மலரும், காரரக்குப் பூசிப்
புதைத்தால் கரிய நிற மலரும் தோன்றும் என்ப. இதனை,

“மாதுளம் பீசமுண் மாணரக்கின் நிறம்
போதுள்ளம் காண்பது போலமற் றென்றான்“
என்னும் நீலகேசிச் செய்யுளானும், “ஒரு மாதுளை வித்தில் காரரக்கும், ஒரு மாதுளை
வித்தில் செவ்வரக்கும் பூசிப் பூமியுள்ளிட தத்சந்தானமாகிய பூவிற் கருமையும் செம்மையும்
ஆன நிறம் தோன்றியவாறு“ என்னும் அதன் உரையானும் உணர்க. (நீலகே - புத்தவா -
செய். 576.)

( 36 )

செய்திகூறத் தொடங்கும் சுச்சுதன் முன்னுரைக்கு
அடக்கங் கூறல்

276. 1கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து
முற்றுநன் றுருவு கொண்ட 2மூர்த்திநின் முன்னர் யாங்கள்
இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக்
கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே.
 

     (இ - ள்.) கொற்றவேல் மன்னர்க்கு ஓதும் - வெற்றியையுடைய வேற்படையைத்
தாங்கிய அரசர்கட்குச் சொல்லப்பெறும், குணம் எலாம் குழுமி வந்து -
நற்குணங்களெல்லாம் ஒன்றாகக்கூடி வந்து, முற்றும் நின்று உருவுகொண்ட மூர்த்தி -
அவைகளெல்லாம் ஒரு வடிவத்தை யெடுத்தாற்போல் அமைந்து விளங்கும் உருவை
யுடையவனே! நின்முன்னர் யாங்கள் இற்றென உரைக்கும் நீதி - உனக்கு முன்னர் நாங்கள்
இச்செயல் இத்தன்மையோடு கூடியது என்று சொல்லும் அறமானது, ஓதுநூல் எல்லை
காணக் கற்றவர்முன்னை - சொல்லப்பெறுகிற பல நூல்களின் முடிவையும் நன்குணருமாறு
கற்றவர்கட்குமுன்பு, ஏனோர் கதை ஒத்துகாட்டும் - கல்லாதவர்கள் பேசும் பேச்சை
ஒத்துமுடியும் (எ - று.) அன்றே, அசை.


(பாடம்) 1. கொற்றவன். 2. மூர்த்தியாமுன்னை.