(இ - ள்.) அஞ்சு இயல்வில்லோய் - அஞ்சுகின்ற இயல்பில்லாத வீரவேந்தனே!. மஞ்சுஇவர் சென்னி மால்வரை வடமலை - முகில்களானவை தவழ்ந்து செல்லுகிற முடிகளையுடைய வெள்ளிமலையின் வடபகுதியிலே, விஞ்சையர் வாழும் விழா அணி நல்உலகு - வித்தியாதரர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சிறப்பமைந்த நல்ல உலகம் ஒன்றுஉள்ளது, அது - அந்த உலகமானது, அமரர்கள் - தேவர்களுடைய, துஞ்சுஇயல் இல்லாத் துறக்கம் அனைத்து - சாக்காடெய்தும் இயல்பு இல்லாத விண்ணுலகத்தைப் போன்றது (எ - று.) பகைவர் அஞ்சுதற்குக் காரணமான இயல்புடைய வில்லையுடையோனே எனினுமாம். துஞ்சியல் - சாக்காடுறு மியல்பு; உறங்கு மியல்பு எனினுமாம். முதலில் அமைச்சன், ஊரைப்புகழத் தொடங்குகின்றான். நாட்டுவளம் மன்னர்கட்கு இன்றியமையாததாகலின அதனை முன்னர் உணர்த்துகின்றான் என்க. |
(இ - ள்.) அந்த வடசேடியானது, மண்இயல் வாழ்நர்க்கும் - மண்ணுலகிலே வாழ்பவர்கட்கும், வான் உலகு ஒப்பது - விண்ணுலகத்தைப் போன்றது, புண்ணியம் இல்லார் புகுதற்கு அரியது - நல்வினையற்றவர்கள் அடைதற்கு அருமையானது, கண்ணிய - மேலாகக் கருதப்பெறுகிற, கற்பகக் கானங் கலந்தது - கற்பகக் சோலைகள் தன்னிடத்திலே பொருந்தப்பெற்றது, இனிதே - இனிமையாக, விண் இயல் இன்பம் விரவிற்று - தேவருலக இன்பமானது கலந்துள்ளது (எ - று.) வடசேடி வானுலகத்தைப் போன்றது; நல்வினையற்றோர் அடை தற்கரியது; கற்பகச்சோலை யமைந்தது; இன்ப மிக்குடையது என்க. |