பக்கம் : 217
 

பொன்னிறமுடைய அப்பூந்துகள்களேயாகும், துகளாய் - அந்நாட்டின்கண் விசும்பிலே
பறந்து திரியும் துகள்களாய், பொலிவன - அழகுறுத்துவனவும், பொன் இதழ்த்தாது -
அப்பொன்னிறப் பூந்தாதுகளே ஆகும், ஆதலால் அவ்வுத்தரசேடி பொன்னுலகாகவே
திகழ்ந்தது. (எ - று.)

ஆதலால் அவ்வுத்தரசேடி பொன்னுலகாவே திகழ்ந்தது என்பது குறிப்பெச்சம்.
பொழிலிடத்தே பூங்கொடிகளில் பூக்கள் நிரலாகச் செறிந்து மலர்ந்துள்ள தோற்றம்,
மலர்மாலை போறலின் “தாமம் அவிழ்ப்பன“ என்றார். வாவிகளினும் பொழிலினும்
நிலத்தினும் விசும்பினும் பொன்னிறமே தோற்றலின் இது பொன்னாடே ஆகும்
என்பது கருத்து. பூத்தல் முதலிய நான்கு ஏதுக்களும். அது பொன்னாடாதலைச் சாதித்தன.

( 42 )

அந்நாட்டுப் பொழில் முதலியன

282. கானங்க ளாவன கற்பகங் காமுகர்
தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்
நானங்க ளாவன நாவி நறுவிரை
வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ?
 

     (இ - ள்.) அந்நாட்டில்; கற்பகம் - வேண்டுவார் வேண்டுவ கொடுக்கும்
கற்பகமரங்கள், கானங்கள் ஆவன - காடுகளாக விளங்குவன, காமுகர் தானங்கள் ஆவன -
இன்ப வேட்கையையுடையர் இன்பம் நுகர் வதற்குரிய இடங்களாக விளங்குவன,
சந்தனத்தாழ் பொழில் - சந்தன மரங்கள் தாழ்ந்து நெருங்கியுள்ள பொழில்களாம்,
நானங்கள் ஆவன - வாசனைப் பொருள்களாவன, நாவி - கத்தூரியும், நறுவிரை - நல்ல
கலவைச் சாந்துமாம், வானங்கள் ஆம் வகைமற்றும் ஒன்று உண்டோ - இன்பம்
நுகர்தற்குரிய விண்ணிடங்களாமாறு வேறு ஒன்றும் உளதோ? (எ - று.)

இந்திரருலகமும் பலவாதலின், வானங்கள் என்றார். வடசேடி எவ்வாற்றானும்
வானவருரகையே ஒக்கும் என்பதாம். நானம் - மணப் பொருள்.
 

( 43 )

283. மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன்
குணிக்க்ப் படாத குளிர்புனல் நீத்தம்
கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம்
பிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால்.