பக்கம் : 226
 

வேறு
மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்

296.

பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னனைய மாண்பின்
மன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள்
மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றா
ளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான்.
 

      (இ - ள்.) அரசனே! பொன்நகர் தன்னை ஆள்வான், முற்கூறியவாறு
நலங்களெல்லாம் இனிதமைந்த அவ் அழகிய நகரத்தை அரசாட்சி செய்கிறவன், புரந்தரன்
அனைய மாண்பின் - தேவேந்திரனைப் போன்ற பெருமையையுடைய, மன்னவன்
மயூரகண்டன் - அரசானாகிய மயூரகண்டன் என்பவனாவான், அவன் தேவிமாருள் -
அவனுடைய மனைவியர்களுள்ளே, மின்அவிர் மருங்குல் நீலாங்கனை என விளங்கி
நின்றாள் - மின்னலைப் போல் விளங்குகின்ற இடையினையுடைய நீலாங்கனை என்று
பெயர் விளங்கியிருந்தவள், பட்டத்துத் தேவியாவள், அச்சுவக்கிரீவன் என்பான் அன்னவள்
புதல்வன் - அச்சுவக்கிரீவன் என்னும் பெயருடையவன் அவளுடைய மகனாவன், கண்டாய்
- தெரிந்துகொள்வாயாக! (எ - று.)

அச்சவக்கிரீவனுடைய தகப்பன் மயூரகண்டன் என்பதும், தாய் நீலாங்கனை என்பதும்
இதனாற் பெறப்பட்டன. அச்சுவக்கிரீவன் வரலாற்றிற்கு இவ்வாறு தொடக்கஞ்
செய்யப்பட்டது.

( 58 )

அச்சுவக்கிரீவன் அரசு எய்திய பின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது.

297. அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும்
பொதியவிழ1 பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரியெய்தி
மதிதவழ் குன்ற மெல்லாம் வணங்கிய பின்றை 2மண்ணும்
கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே.
 

(பாடம்) 1. புலங்கொள். 2. மன்னும்.