பக்கம் : 23
 

காற்றெழுப்புங் கருவி, பீலிய-பலவின்பாற் குறிப்பு முற்றெச்சம். முகில் முழக்கங் கேட்பின்
ஆடுதல் மயில்களின் இயல்பு.

( 15 )

முல்லை

22. நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்
உக்க தாதடர் கொண்டொலி வண்டறா
எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப்
பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.
 
     (இ - ள்.) ஒர்பால் எலாம் - முல்லை நிலப்பக்கங்களில் எல்லாம்; நக்க
முல்லையும்-மலர்ந்த முல்லைப்பூக்களும்; நாகு இளம் கொன்றையும் - மிகப் புதியவாய்
மலர்ந்த கொன்றைப்பூக்களும்; உக்கதாது அடர்கொண்டு-சொரிந்த பூந்தாதின் கண்
மொய்த்து; ஒலிவண்டு அறா - ஒலித்தலையுடைய வண்டுகள் நீங்காமைக்குக் காரணமான;
எக்கர் ஈர்மணல் கிண்டி-அலைகளால் இடப்பட்ட குளிர்ந்த மணலைக்கிளறி; ஆண்டுள்ள
இரையை ஊட்டக்கருதி; பறவை-நீர்ப்பறவையின் சேவல்கள்; இளம்பெடைப் பக்கம்
நோக்கும்-தமது அண்மை யிலுள்ள இளமை மிக்க தமது பெண் பறவையைப் பார்க்கும்.
(எ - று.)

     முல்லைக்குப் பறவை கானங்கோழியும் சிவலும் என்பர். இளம் பெடைப் பக்கம்
நோக்கும் என்றதனால் சேவல்கள் என்று பொருள் கூறப்பட்டது. பெடைப்பக்கம்
நோக்குதல், கிண்டிய இடத்திற் காணப்பட்ட இரையைப் பெடை உண்ணற் பொருட்டு.
“புலராவீர் மணன் மலிரக்கெண்டி
நாளிரை கவரமாட்டித், தன்பெடை நோக்கிய பெருந்தகு நிலையே“ என்றார் நற்றிணையினும்  (21 : 10 - 12)

     நக்க, உக்க என்பனவற்றிற்கு, நகு உகு என்பன பகுதிகள். நாகிளம், ஒருபொருட்
பன்மொழி. பெடை எனினும் பேடை எனினும் ஒக்கும். எல்லாப் பறவையின் பெண்
பால்களும் பேடை என்று வழங்கப்பெறும்.

( 16 )

மருதம்

23. துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு
கள்ள றாதசெந் தாமரைக் கானகத்
துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்
புள்ள றாதுபு லம்பின பொய்கையே.