அச்சுவக்கிரீவனை மறுக்கத் தொடங்குவோன் சுச்சுதன், தன் மாட்டு வெறுப்புக் கொள்ளாவாறு இவ்வாறு தொடங்குகிறான். நொடி வல்லான், தோலாநாவிற் சுச்சுதன் என்பன, அவன் கூறியன அவன் சொல்வன்மையால் மெய்ம்மைய போன்றிருக்கின்றன; உண்மையில் அவை அத்துணை வாய்மையல்ல என்பது குறிப்பு. |
(இ - ள்.) தேனும் வண்டும் - பொன் வண்டுகளும் ஆண் வண்டுகளும், தீதில பாடும் - குற்றமில்லாத பண்களைப் பாடுதல் செய்யும்; செறிதாரோய் - பூக்கள் நெருங்கிய மாலையை அணிந்தவனே!, அச்சுவகண்டன் திறம் அஃதே - அச்சுவக்கிரீவனுடைய செய்தி அவ்வாறானதுதான், யானுங் கண்டேன் - அதனை நானும் நன்றாக வுணர்ந்திருக்கிறேன், மானங்கொண்ட - பெருமையமைந்த, மாரதர் போர் ஏறு அனையாய் - பதினாயிரம் போர் மறவர்களுடன் தனித்து நின்று போர் செய்யும் பெருந்தேர் வீரர்களாகிய யானைக் கூட்டத்திற்கு ஆண் சிங்கத்தைப்போன்றவனே!, ஓர் ஊனங்கண்டேன் - அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குற்றம் இருப்பதை நானறிந்திருக்கிறேன், ஆதலால்; ஒட்டினும் ஒட்டேன் - இவ்வையோரெல்லாம் உடன்படினும் நான் உடன்படேன், உரைசெய்கேன் - அக்குற்றம் இன்னதென்று கூறுகிறேன், (எ - று.) அச்சுவக்கீரிவனுக்கும் ஒரு குற்றம் இருக்கிறது, அதனைக் கூறுகிறேன் என்கிறான். |