பக்கம் : 236
 

     (இ - ள்.) மானக்கோதை - பெருமை பொருந்திய மாலையிணை யணிந்த,
மாசறுவேலோர் - குற்றமற்ற வேற்படையையுடையவனே! நானக் கோதை நங்கை பிறந்த
நாளால் - கத்தூரி மணங்கமழும் மாலையை யணிந்த சுயம்பிரபை தோன்றிய நாளில், வரவு
எண்ணி - மேல் நிகழப் போகின்றவைகளை நினைத்து, வானக்கோளின் மாண்புணர்வார்கள்
- விண்ணிற் செல்லும் கோள்களின் (கிரகங்களின்) பெருமையை யறிந்தவர்கள், மறு
இல்லாத் தானக்கோளில் - குற்றமில்லாத இருப்பிடங்களில் கோள்கள்
அமைந்துள்ளமையால், சாதகவோலை - பிறந்தநாட் குறிப்புச் சுவடியை, தலைவைத்தார் - சிறந்ததாகக் குறித்து வைத்துள்ளார்கள். (எ - று.)

பிறந்தநாட் குறிப்புச் சிறந்ததாக விளங்குகின்றது என்றல். தலை வைத்தல், மற்றவைகள்
யாவற்றிற்கும் முதன்மையாய் இருக்கச் செய்தல்

( 72 )

அச்சுவக்கிரீவன் தன்னிகரற்ற தனி மன்னன்

311. காவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன்
மேவிப் பட்டம் பெற்றவன் 1காதன் மேயானால்
ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும்
தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள்.
 

      (இ - ள்.) காவிப்பட்டம் - செங்கழுநீர் மலர்கள் நிறைந்த நீர் நிலைகள், கள் விரி
- தேனை மிகப் பெருக்குகின்ற, கானல் - நெய்தல் நிலத்தையுடைய, கடல் நாடன் -
கடலாற் சூழப்பட்ட நாட்டிற்கு அரசன் ஆகியவனும், மேவிப்பட்டம் பெற்றவன் - தன்
தந்தையால் விருப்பப்பட்டு முடி சூட்டப்பெற்றவனும் ஆகிய, காதல் மேயானால் - தன்பாற்
காதற் கிழமை பூண்டுள்ள தன் கணவனாலே, ஏவி - ஒவ்வொரு வினையின்கண்
செலுத்தப்பட்டு, பட்டம் ஈந்தவர் எல்லாம் - அதன்கட் சிறப்புடைமை கண்டு பட்டம்
வழங்கப்பட்ட பிறரெல்லாம், இனிது ஏத்தும் - இனிதாக வணங்கற் சிறப்புடைய,
தேவிப்பட்டம் - கோப்பெருந்தேவி என்னும் சிறப்புப் பட்டத்தை - திருவன்னாள் -
திருமகளை ஒத்த நஞ்சுயம்பிரபை, சேர்பவள் - எய்துதற்கரியள் ஆவள், (எ - று.)
அன்றும் ஏயும் அசைகள்.


(பாடம்) 1. காதல் பெற்றானால்.