பக்கம் : 246
 

     (இ - ள்.) மன்னா - அரசனே! செந்தளிர் புதைந்த சோலை - சிவந்த தளிர்கள்
நிறைந்த பொழில்களாற் சூழப்பெற்ற, சித்திரகூடம் ஆளும் - சித்திரகூட நகரத்தை
அரசாட்சி புரிகின்றவனும், அம்தளிர் அலங்கல் மாலை அரசர்கோன் சிறுவன் - அழகிய
தளிர்கள் இடையிடை தொடுத்துக் கட்டப்பெற்ற மாலையினையணிந்தவனுமாகிய அரசர்
பெருமானுடைய மகன், அம்தார் இந்திரன் புதல்வன் அன்னான் - அழகிய மாலையினை
யணிந்த இந்திரன் புதல்வனாகிய சயந்தனை ஒத்தவன், ஏந்தல் எமாங்கதற்கு -
சிறந்தவனாகிய அவ்வேமாங்கதனுக்கு, இம்மந்திர உலகில் வாழும் மன்னர் மாறு இல்லை -
இவ்வித்தியாதர ருலகத்தில் அரசாட்சி செய்யும் அரசர்கள் எவரும் பகையுடையவர்கலலர், (எ - று.)

பேராற்றலும் சூழ்ச்சித்திறனும் பிற நலங்களும் உடையனாதலின் பகைவர்கள் இலராயினர் என்க.

( 87 )

அச்சுவபுரத்துக் கனக சித்திரன்

326. அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்
திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்
கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே
1ஒருமணி திலதமாக வுடையது நிலம தென்றான்.
 

      (இ - ள்.) அருமணி அடுத்த வீதி - அரியமணிகள் பொருந்திய
தெருக்களையுடைய, அச்சுவபுரமது ஆளும் - அச்சுவபுரத்தினை அரசாட்சி செய்கின்ற,
திருமணி திகழும் பூணான் பெருமகன் - அழகிய மணிகள் பதித்துச் செய்யப்பட்டு
விளங்கும் அணிகலன்களை யணிந்த அரசனுடைய தலைமகனும், சிறைவண்டு என்னும்
கருமணி துதைந்த பைந்தார்க்கனக சித்திரனை அன்றே - சிறைகளையுடைய வண்டுகள்
என்று கூறப்பெறுகின்ற கரியமணிகள் பொருந்திய பசிய மாலையினை யணிந்தவனுமாகிய
கனகசித்திரனையல்லவோ, நிலம் - நிலவுலகமானது, ஒரு மணிதிலதமாக உடையது என்றான்
- ஒப்பற்ற அழகிய நெற்றிப் பொட்டைப்போலப் பெற்றிருக்கின்றது என்று கூறினான்,
(எ -று.)


(பாடம்) 1. ஒரு மணித்திலதமாக நிலமகளுடையதென்றான்.