பக்கம் : 265
 

செல்லான் - ஒரு பொருளாக நினைத்து மனந்திரியமாட்டான், தீது எலாம் அகல நோற்று -
தீவினைகளெல்லாம் நீங்குமாறு தவஞ்செய்து, சிவகதி சேரும் என்று - இறைவன்
நிலைமையை அடைவான் என்று, அக்கோதிலா முனிவன் சொன்ன உரை இவை - அந்தக்
குற்றமற்ற அசோதர முனிவன் சுரேந்திரகாந்த மன்னனுக்குக் கூறிய இந்த மொழிகளை,
கூறக்கேட்டாம் - நாமும் பிறர்சொல்ல அறிந்திருக்கின்றோம், (எ - று.)

தேவ போகத்தை நுகர்ந்தவன் அதற்குக் கீழ்ப்பட்டதாய மனித போகத்தை விரும்பான். தேவபோகத்திற்கு மேற்பட்டதாய சிவகதியையே சேர்வான் என்று அம்முனிவன்
சுரேந்திரகாந்த மன்னனுக்குச் சொன்ன உரையினை யாமும் அறிந்தோம்
கூறக்கேட்டுள்ளேம் என்று சுமந்திரி கூறினான் என்க.

( 117 )

இறைநிலையை எய்துவார்க்கு உறவினர்
வேண்டியவரல்லர்

356. அம்மையாற் றவங்க டாங்கி 1யலர்ந்தநல் லறிவி னாலும்
இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்
செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு
மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே.
 

     (இ - ள்.) வேந்தே - அரசனே!, அம்மையால் தவங்கள் தாங்கி - முற்பிறப்பின்
நல்வினையால் தவங்களைச் செய்து, அலர்ந்த நல்லறிவி னாலும் - விரிந்துள்ள
மெய்யறிவினாலும் இமமையால் உடம்பு நீங்கி - இப்பிறப்பின்கண் உடலானது நீங்கப்பெற்று,
இகந்துபோம் இயற்கையாலும் - விலகிப் போகின்ற இயல்பினாலும், செம்மையால் -
சிறப்பினால், கடவுள் தானம் சேர்வதே சிந்தையாற்கு - கடவுளின் நிலையை அடைதலே
எண்ணமாகவுடையவனுக்கு, மெய்ம்மையால் - உண்மையாக, கருமச் சுற்றம் வேண்டுவது
இல்லை - வினைசெயற்குத் துணையாவராகிய மனைவி மக்கள் முதலாயினோர்
வேண்டியவராகார் (எ - று.)
வீடுபேற்றில் விருப்புள்ளவர்கள் உலகச் சுற்றத்தை விரும்பார்கள் என்க.

( 118 )


   (பாடம்) 1. யலர்ந்தன நலிவினாலும்.