பக்கம் : 266
 

சுயம்பிரபைக்குச் சுயம்வரமும் கூடாது என்றல்

357.

வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத்
தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும்
ஆரவி ராழி யானை யஞ்சுது மறிய லாகா
கார்விரி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான்.
 

      (இ - ள்.) கார்விரி தடக்கை வேந்தே - இரவலர்க்குக் கொடை யளிப்பதிலே
கார்காலத்து முகிலினது தன்மையானது அமையப்பெற்ற பெரிய கையையுடைய அரசனே!,
வார் அணி முரசம் ஆர்ப்ப - வாரால் வரிந்து கட்டப்பெற்ற அழகிய முரசம் ஒலிக்கவும்,
வயிரொடு வளைகள் ஏங்க - ஊதுகொம்புகளோடு சங்குகள் இசைக்கவும், தாரவர்
குழாங்கள் ஈண்ட - மாலையை அணிந்த அரசர் கூட்டங்கள் நெருங்கவும், சயமரம்
அறைது மேனும் - தானே மணாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதாகிய சுயம்வரத்திற்கு
ஆவனசெய்து அறிவிப்போமானாலும், ஆர் அவிர் ஆழியானை - நிறைந்த ஒளிவீசும்
உருளைப் படையையுடையவனாகிய அச்சுவகண்டனை, அஞ்சுதும் -
அஞ்சிக்கொண்டிருத்தல் வேண்டும். கழலவர் கருமம் - வீரக்கழலையணிந்த மற்றைய
அரசர்களுடைய செயலை, அறியலாகா என்றான் - நாம் உணர்ந்து கொள்ளுதல் இயலாது
என்று கூறினான் (எ - று.)

சுயம்பிரபை தானே மணாளனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுயம்வரச் செய்தியை
அறிவிப்போமாயினும் அதனாலும் தீமை நேரிடும்; அச்சுவகண்டனும் பகையாக முடிவன்.
மற்றைய அரசர்களும் தீமை புரியத் தொடங்குவர் என்கிறான் அமைச்சன்,

( 119 )

ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்

358. ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே
கன்றிநாங் கருதிற் றின்றி மற்றொர்வா றாக நண்ணும்
என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் 1தென்ன மாட்டாம்
இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான்.
 

      (இ - ள்.) ஒன்றுநாங் கருதிச் சூழின் - ஒரு செய்கையை நாம் நன்றாக எண்ணித்
தொடங்குவோமானாலும், ஊழது விளைவு - அச் செய்கையின் முறைமையமைந்த
நிகழ்ச்சியானது, தானே கன்றி - தானாகவே தோன்றி முதிர்ந்து, நாங்கருதிற்று இன்றி -
நாம் நினைத்தபடி நடவாமல்,


(பாடம்) 1. எண்ண.