பக்கம் : 272
 

     (இ - ள்.) குண்டு நீர் - ஆழமான நீரினையும், குழு குவளை மலர்ப் பட்டமும் -
கூட்டமான குவளைமலரையும் உடைய குளங்களினும், நீர் மண்டு மரகதமணிக்கல் வாவியும்
- நீர்புகா நின்ற மரகத மணிகள் பதிக்கப்பட்ட படித்துறைகளையுடைய நீர்நிலைகளினும்
புகுந்து, இளையவர் நீர்கொண்டு குடைய - இளமையுடைய மகளிரும் மைந்தரும் நீரைக்
கையான் வாரிக் கொண்டு ஆடுதலானே, வண்டுகொங்கொடு நீர்த்திவலையின் மயங்கி -
அலமந்த வண்டுகள் தேன் துளிகட்கும் நீர்த்துளிகட்கும் வேற்றுமை யுணராது மயங்கித்
தடுமாறி, வீழ்ந்த - வீழலாயின (எ - று.)

மரகத மணிக்கல் போன்ற நிறமுடைய வாவியுமாம். கொங்கு - தேன், திவலை - துளி.

( 128 )

367. பங்கயத் துகள்படு பழன நீர்த்திரை
மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
அங்கவ ரரிசன மழித்த சேற்றினும்
குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே.
 

      (இ - ள்.) பங்கயத் துகள் படு பழன நீர்த்திரை - தாமரைப் பூந்தாது படிந்த
மருதநிலத்துள்ள நீர்நிலைகளின் அலைகள், மங்கையர் முலையொடு பொருத - அவற்றில்
ஆடா நின்ற மகளிர்களின் முலைகளோடு மோதாநின்றன, வாவிகள் -
அவ்வலைகளையுடைய அக்குளங்களோ, அங்கு அவர் அழித்த அரிசனச் சேற்றினும் -
அவ்விடத்தே அம்மகளிர் அழித்த மஞ்சட் குழம்பானும், குங்குமக் குழம்பினும் - குங்குமக்
குழம்பானும், குழம்பு கொண்ட - தம்மகங் குழம்புவனவாயின (எ - று.)

பழனம் - ஈண்டு மருதத்தின் மேனின்றது. அலைகள் முலையொடு பொருத;
அவற்றையுடைய வாவிகள் அகங்குழம்பின என்ற நயம் உணர்க. அரிசனம் - மஞ்சள். அஞ்சனமென்றும் பாடம்.

( 129 )

368. அங்கள்வாய்க் கயம்வள ராம்ப றூம்புடைப்
1பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு
கொங்கைவாய்க் குழலவர் 2குளிப்ப விட்டன
திங்கள்வாண் முகவொளி திளைப்ப 3விண்டவே.
 

(பாடம்) 1. தூம்பிடை பொங்குபு சுடர்பட, பொங்குபு குடர்பட. 2. குளிர்ப்ப விட்டனர். 3. விட்டவே.