பக்கம் : 275
 

உருவம் அமையச் செதுக்கப்பட்ட இருக்கைகளாகிய பிறவற்றினும், அருமணிக்கொம்பு
அனார் - காண்டற்கரிய மணிப்பூங்கொம்பு போன்ற மகளிர், பருமணிப் பளிங்கு என -
பரிய மணியாகிய படிகம்போன்று, விளங்கு வான் பலி - திகழாநின்ற சிறந்த சந்தனக்
குழம்பினை, அலர - விளங்கும்படி, ஊட்டினார் - பூசினார் (எ - று.)

கொம்பனார், பீடமும் செதுக்கமும் அலரப் பலியூட்டினர் என்க. செதுக்கம் -
செதுக்கிச்செய்த தவிசு. பலி - சந்தனக்குழம்பு.

( 133 )

பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்

372. அன்னணம் பொழுதுகண் 1ணகற்ற வாயிடைப்
பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக்
2கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை
மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார்.
 

     (இ - ள்.) அன்னணம் - அவ்வாறு, பொழுது கண்ணகற்ற - காலமானது
கடந்துகொண்டிருக்க, ஆயிடை - அவ்வேளையில், பன்அரும் - கூறுதற்கு அருமையான,
காலநூல் பயின்ற - பொழுதளவை நூலினைக் கற்றுணர்ந்த, பண்பு உடைக்கன்னலங்
கருவியோர் - பான்மையமைந்த நாழிகை வட்டிலையுடையவர்கள், கழிந்த நாழிகை -
அதுவரையிற் சென்றுள்ளபொழுதை, மன்னவன் - அரசனின், அடிமுதல் உணர்த்தி -
முன்னாலே தெரியப்படுத்தி. வாழ்த்தினார் - வாழ்த்துரைகள் கூறினார்கள்.
(எ - று.)

( 134 )

மன்னன் உண்ணுதல்

373. வாரணி முலையவர் பரவ மன்னவன்
ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந்
தேரணி யின்னிய மிசைத்த வின்பமோ
டாரணி தெரியலா னமிர்த மேயினான்.
 

     (இ - ள்.) வாரணி - கச்சணிந்த, முலையவர் - முலையினையுடைய மகளிர்கள், பரவ
- வாழ்த்தாநிற்ப, மன்னவன் - அரசன், ஈர் அணி பள்ளி - குளிர்ச்சியின் பொருட்டு
ஆவன அமைக்கப்பட்ட மாடத்தில்,


(பாடம்) 1. அற்ற. 2. கண்ணறும், கண்ணலம்.